என் மீது கொலை மிரட்டல் வழக்கா?... தற்கொலை செய்கிறேன்... பாமக பாலு ஆவேசம்
சென்னை: உளுந்தூர்ப்பேட்டையில் அதிமுக பணத்தை கோடி கோடியாக வாரியிறைத்துள்ளது. இங்கு எதற்கு தேர்தல் என்று தனியாக நடத்துகிறீர்கள். மன்னராட்சி போல யாரையாவது நியமித்து விட்டுப் போக வேண்டியதுதானே. நான் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒன்று என்னைத் தூக்கில் போடுங்கள் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு ஆவேசமாக கூறியுள்ளார்.
உளுந்துார்பேட்டை தொகுதியில், அதிமுக - திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக, வேட்பாளர் பாலு, தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் முறையிட சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த தாசில்தார் ராஜேந்திரன் என்பவர் தலை மீது பணத்தை அவர் கொட்டிய செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இதுதொடர்பாக பாலு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...
தொடர்ந்து புகார் கொடுத்தேன்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி முறையாக புகார் தெரிவிக்கவில்லை என்று சொல்லுகிறார். நான் 11ம் தேதி முதல் புகார் தருகிறேன். அதிமுகவினர் 11ம் தேதி இரவு ஓட்டுக்கு 500 கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். நான் சொன்ன மாதிரி அதிமுகவினர் தொகுதி முழுக்க பணம் கொடுத்தனர்.
எந்த நடவடிக்கையும் இல்லை
பிரச்சாரத்திற்கு நான் 12ம் தேதி சென்றபோது நேற்றே எங்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள் என்று பெண்கள் பலர் தெரிவித்தனர் 13ஆம் தேதி மீண்டும் ஒரு புகார் தருகிறேன். நான் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களிடம் இருக்கும் அதிகாரிகளை பயன்படுத்தி பணப்பட்டுவாடாவை தடுக்க சக்திகள் இல்லை. ஆகையால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை மேலதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 14ஆம் தேதி திமுகவினர் பணம் கொடுத்தனர். இரண்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பணம் கொடுப்பதை அறிந்தேன்.
எதற்கு இந்த தேர்தல் ஆணையம்?
பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இப்படி ஒரு தேர்தல் எதற்கு. இதற்கு ஒரு தேர்தல் ஆணையம். இதுதான் தேர்தலா. இதுதான் மக்கள் ஆட்சியா. இதற்குத்தான் மகாத்மா காந்தி நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா. அண்ணல் அம்பேத்கர் இதற்காகத்தான் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினாரா. இது விநோதமாக இருக்கிறது. என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பெண்கள் கொடுத்த புகார்
புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்லுகிறது. என்னோடு வந்த பெண்கள், எனக்கு 500 ரூபாய் கொடுத்தாங்க. இந்தாங்க புகார் என்று சொல்லி புகார்களை கொடுத்தார்கள். அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.
என்னைப் பலி கொடுக்க வேண்டுமா?
தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பண விநியோகத்தை தடுப்பதற்காக அதற்கு என்னை பலிக்கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதே வேளையில் தமிழ்நாடு முழுவதும் பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது. தேர்தல் அதிகாரி இல்லை என்று மறுக்கட்டும். இல்லை என்று சொல்லட்டும். இதுதான் தேர்தலா. இதுதான் நடுநிலைமையோடு நடக்கிற தேர்தலா என்பதை ஒவ்வொரு வாக்காளர்களிடமும் மன்றாடி கேட்கிறேன்.
இது மன்னர் ஆட்சி
நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய மக்களாட்சித் தத்துவம் இது இல்லை. நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஜனநாயகம் இது இல்லை. நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய குடியாட்சி இது இல்லை. இது மன்னர் ஆட்சியாக இருக்கிறது.
பணத்தை தலையில் போடுவது நியாயமா?
உங்களது கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுப்பதற்கு விதிமுறை இருக்கிறது. அவர் மீது பணத்தை வீசியடிப்பது நியாயமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த பாலு, நியாயமான கேள்வி. ஒரு தேர்தல் அதிகாரி எப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் இருக்கிறது. புகார்கள் வந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கிறது. அந்த விதிகளை தேர்தல் அதிகாரிகள் ஏன் பின்பற்றவில்லை.
நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்?
தேர்தல் அதிகாரிகள் செய்ய தவறியதை இந்த உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக நான் அன்று நடந்துகொண்டபோது, எந்த விதத்திலும், எந்த தவறான வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. சுயகட்டுப்பாட்டோடு இந்த விசயத்தை உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். உளுந்தூர்பேட்டையில் மட்டும் 27 கோடி ரூபாய் இரண்டு நாட்களில் பரவி இருக்கிறது. அந்த விசயம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு செல்லவில்லை. இதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக நான் அப்படி நடந்து கொண்டேன்.
ஆதாரத்துடன் புகார் தருகிறேன்
பெண்கள் மீது வன்முறை செய்ததாக என் மீது வழக்கு போட்டியிருக்கிறார்கள். நான் நடந்து கொண்ட விதத்திற்கும் இந்த வழக்கிற்கும் ஒரு சம்மந்தமாவது இருக்கிறதா. ஒரு வேட்பாளராக இருக்கக் கூடிய நான், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கக் கூடிய நான் ஆதாரத்தோடு புகார் கொடுக்கும்போது, தேர்தல் ஆணையம் என் மீதே வழக்கு போடுகிறது என்றால், ஒரு சாமானிய மக்கள் எப்படி இந்த அநியாகத்தை எதிர்க்க முன் வருவார்கள்.
தற்கொலை செய்து கொள்கிறேன்
என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததாகவும், உள்ளே புகுந்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும், பெண்களை நான் வன்முறை பண்ணியதாகவும் இருக்கிறது என்றால், என்னோடு சில பெண்களும் வந்து புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோ உலகம் முழுவதும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவில் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக இருந்தாலோ, பெண்களை வன்முறை செய்வதாக இருந்தாலோ தற்கொலை செய்துக்கொள்கிறேன். இல்லையென்றால் என்னை இங்கேயே தூக்கில் போடுங்கள்.
யாரையாவது நியமிச்சுட்டுப் போங்களேன்
ஒரு குடிமகன் மீது அவதூறாக, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, இதுபோன்ற வழக்குகள் போடுவதை தேர்தல் ஆணையம் செய்தது என்றால், அதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போது இந்த பணம் விநியோகத்தை தடுக்கப் போகிறோம். பணம் விநியோகம் மூலம் தான் தேர்தலை நடத்துவது என்றால், இதற்கு பெயர் தேர்தல் கிடையாது. இப்படி ஒரு தேர்தல் தேவையில்லை. பணம் வைத்துள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் எம்எல்ஏவாக, எம்பியாக இருக்கட்டும். மன்னர் ஆட்சியை வைத்துவிட்டுப்போங்கள்.
தேர்தலை தள்ளி வையுங்கள்
உளுந்தூர்ப்பேட்டையிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என 11ம் தேதி, 13ம் தேதி புகார் மனுவில் சொல்லியிருக்கிறேன். உங்கள் விசாரணையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று தெரிய வந்தால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அரவக்குறிச்சியில் மட்டும்தான் பணம் விநியோகம் நடந்ததா. 234 தொகுதிகளிலும் நடக்கவில்லையா.
தமிழக தேர்தலையே தள்ளி வையுங்கள்
என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடக்கக் கூடிய தேர்தலையும் நிறுத்த வேண்டும். அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. 19ஆம் தேதி 233 தொகுதிக்கும் முடிவு அறிவித்து, பின்னர் ஒரு ஆட்சி அமைக்கப்பட்டு, அதன் பின்னர் அரவக்குறிச்சியில் நடத்தப்படும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று பார்ப்போம் என்றார்.