மாற்றம், முன்னேற்றம்?: பாலியல் புகாரில் சிக்கிய பாமக நாங்குநேரி வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!
நெல்லை: நாங்குநேரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், திருப்பதி என்பவர் திடீரென, அதிமுகவில் இணைந்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு திரும்ப பெறும் நாட்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திருப்பதி இன்று, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே மடத்துக்குளம் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் வேட்பாளர் முத்துக்குமார் திடீரென அதிமுகவில் இணைந்து ஷாக் கொடுத்தார். இன்று பாமக வேட்பாளரும் அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?:
தனது தேர்தல் பணிக்காக ரெட்டியார்பட்டியை சேர்ந்த சிவராமன் என்பவரை, திருப்பதி, கார் டிரைவராக ஒப்பந்தம் செய்திருந்தார். இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, டிரைவரின் மனைவிக்கு அடிக்கடி போன் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிவராமனின் மனைவி, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் திருப்பதி, இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். வழக்கில் இருந்து தப்ப அரசியல் செல்வாக்கை பயன்படுத்தும் நோக்கில் அவர் அதிமுகவில் இணைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து திருப்பதி கூறுகையில், "நாங்குநேரி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப்பெரும் செல்வந்தர்கள். அவர்களோடு போட்டிபோட்டு பிரசாரம் செய்ய பணம் தேவைப்பட்டது. பாமக மேலிடம் பணம் தரவில்லை என்பதால் அதிமுகவில் சேர்ந்துவிட்டேன். எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கில் உண்மையில்லை. சட்டப்படி அதை நிரூபிப்பேன்" என்றார்.