உளுந்தூர்பேட்டையில் தாசில்தார் தலையில் பணத்தை கொட்டிய பாமக வேட்பாளர்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் அதிமுக, திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாமக வேட்பாளர் பாலு தாசில்தார் தலையில் பணத்தை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக பாமக வேட்பாளர் பாலு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலு 20க்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்களுடன் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு சனிக்கிழமை சென்றார்.
அங்கு முகுந்தன் இல்லாததால் தாசில்தார் ராஜேந்திரனை சந்தித்த பாலு, நான் பணப் பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார். அதற்கு ராஜேந்திரனோ, எனக்கு தெரியாது, தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
ராஜேந்திரனின் பதிலால் கோபம் அடைந்த பாலு தான் கையில் வைத்திருந்த பணத்தை தாசில்தாரின் தலையில் கொட்டினார். மேலும் சில நோட்டுகளை அவர் மீது வீசினார். அவர் கொட்டிய நோட்டுக்கள் எல்லாம் பெண் வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக வழங்கிய பணமாம்.
பணப் பட்டுவாடாவை நிறுத்தாவிட்டால் பெண் வாக்காளர்களை ஒன்று திரட்டி போராடுவேன், உளுந்தூர்பேட்டையில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் பாலு.