”ராமதாஸ் கொள்கை காத்தோட போச்சு, பாச மகன் கட்சியா மாறிப் போச்சு”: விந்தியா பிரச்சாரம்
தர்மபுரி: தேர்தலில் ஆளாளுக்கு நடிகைகள் நடிகர்கள் என பிரச்சார களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
அவர்கள் பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் செய்யும் அலப்பறைகளும், கொஞ்சும் தமிழை கொலை செய்வதும்தான் இப்போது தேர்தல் களத்தில் ஹாட் டாபிக்.
அதில் ஒருவர்தான் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யும் நடிகை விந்தியா.
வார்த்தை ஜாலம்:
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து விந்தியா உதிர்த்த வார்த்தை முத்துக்கள் இங்கே உங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸ் சபதம் என்ன ஆச்சு? :
அதிமுக சொத்து சேர்க்க ஆரம்பிச்ச கட்சி அல்ல, மக்களுக்காக ஆரம்பிச்ச கட்சி. 82 லதான் பா.ம.க வை ஆரம்பிச்சாங்க. ஆரம்பிக்கும் போது இது வன்னியர் இயக்கமா இருக்கும். அரசியல் கட்சியா மாத்த மாட்டேன்.
டிராமா போடும் ராமதாஸ்:
சொந்த குடும்பத்து ஆளுகள சேக்க மாட்டேன்னு ராமதாஸ் சொன்னார். இன்னைக்கு மகனுக்கு சீட்டு வாங்க மானத்தை அடகு வச்சு ஆஸ்பத்திரியில படுத்திருக்கிறதா டிராமா போடுறார். அவர் ஜாதி நோயை பரப்புரவரு ஜாக்கிரதையா இருங்க.
ஆண்டவன் வச்ச ஆப்பு:
ராமதாஸ் இதுவரை நடிகர் நடிகைகளை மிக மோசமாக பேசினார். ஆனா இப்ப ஆண்டவன் வச்சான் ஆப்பு. எந்த நடிகரை எதிர்த்து நெஞ்சு நிமிர்த்தி அரசியல் பண்ணனும்னு பார்த்தாரோ அந்த நடிகருக்கு ஆதரவா பாமக காரங்க பிரசாரம் பண்றாங்க.
சரணாகதி ஆன ராமதாஸ்:
தனியா நிக்கிறேன்னு தம்பட்டம் அடிச்ச ராமதாஸ் பாஜககிட்ட சரண்டர் ஆய்ட்டார். ஜாதி மக்கள் முன்னேற்றத்துக்காக வேலை செய்றதா சொன்னவரு இப்போ மகனுக்காக வேலை செய்றாரு.
டாடியை விட மோடிதான் கிரேட்:
ராமதாஸ் சொன்னாலும் இப்ப அன்புமணிகேக்கமாட்டார். அன்புமணிக்கு டாடியைவிட மோடியைத்தான் பிடிச்சிருக்கு. பாமக இப்போ பாசக்கார மகன் கட்சியா மாறிடிச்சு.என்று பலமாக பா.ம.கவை தாக்கி சூடுபரக்க பிரச்சாரம் செய்துள்ளார் அதிமுகவின் புதிய கொள்கை "பீரங்கி" விந்தியா.