பயங்கரமாக எகிறும் பாமக டிமாண்ட்.. உஷாரான அதிமுக.. அடுத்தடுத்து வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Recommended Video
சென்னை: தற்போதைய தமிழக அரசியல் சூழலில், ஏகத்துக்கும் டிமாண்ட் எகிறிப்போயுள்ள ஒரு கட்சி என்றால் அது பாமகதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழருவி மணியன் அளித்த ஒரு பேட்டி, அதற்கு இன்னும் சுவாரசியம் கூட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழக அரசியல் சூழ்நிலை என்பது முன்பு போல இல்லை. கள நிலவரம் வெகுவாக மாறிவிட்டது. முன்பெல்லாம், திமுக அல்லது அதிமுக என மக்கள் மாற்றி மாற்றி வாக்களிப்பார்கள். இரு கட்சிகளுக்குமே வெற்றி வித்தியாசத்தில் நல்ல இடைவெளி இருக்கும்.
ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு விந்தை நிகழ்ந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் திமுக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அதிமுக மறுபடியும் ஆட்சியை பிடித்தது. இரு கட்சிகள் நடுவேயான வாக்கு சதவீத வித்தியாசம் ரொம்ப கம்மி.
நாங்க இருக்கோம்.. நம்பிக்கை அளித்த திமுக.. விஜய் வீட்டு ரெய்டால் அரசியலில் நடக்கும் போகும் அதிரடிகள்
மக்கள் நல கூட்டணி
இப்படி திமுகவுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பு கை நழுவி போனதில், மக்கள் நல கூட்டணிக்கு முக்கிய பங்கு இருந்தது. வைகோவின் முன்முயற்சியால், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் என திமுகவைபோன்ற ஒத்த கருத்துள்ள பல கட்சிகளும் இணைந்தன. இதனால் திமுகவுக்கு வர வேண்டிய ஓட்டு பிரிந்து போனது. சொற்ப வித்தியாசத்தில் அதிமுக வென்றது. அப்போதைய கள சூழ்நிலையில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல் நலிவுற்றிருந்தார். ஜெயலலிதா ஆரோக்கியமாகவே காணப்பட்டார். அப்படியும், அதிமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஸ் மார்க் வாங்கியது.
புதிய தலைமை
இந்த தேர்தலை அளவுகோலாக வைத்து பார்த்தால், இப்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே புதிய தலைமை வந்துள்ளது. இரு தலைமையுமே அவர்கள் கட்சியின் முன்னாள் தலைவர்கள் செய்த கள சாதனையை இன்னும் நிரூபித்துக் காட்டவில்லை. அவர்கள் அளவுக்கு இன்னும் புகழும் பெறவில்லை. எனவே, பிற கட்சிகள் இணைந்து ஒரு வலுவான கூட்டணி அமைந்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிக்கும் பெரும் வேட்டு வைக்கும் வாய்ப்பு திறந்தே உள்ளது.
பேரம் அதிகரிக்கும்
இப்போதுள்ள கட்சிகளில் அதிமுக, திமுக தவிர்த்து பிற எந்த ஒரு கட்சியின் கூட்டணியும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வலிமையானது அல்ல. ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை கிடைக்க விடச் செய்யாமல் இருக்க வைக்கும் பலமுள்ள கட்சிகள். எனவே, இம்முறை கூட்டணி பேரத்தின்போது, சிறு கட்சிகள் கைகள்தான் ஓங்கியிருக்கும். அவர்கள் சீட் பேரத்தை அதிகரிப்பார்கள். ஆனால், அக்கட்சிகள் கேட்கும் அளவுக்கான சீட்டுகளை திமுக அல்லது அதிமுக கொடுக்க முடியுமா என்பதே கேள்விக்குறி.
ரஜினிகாந்த் கட்சி
இந்த நேரத்தில்தான், ரஜினியின் கட்சி கைகொடுக்க கூடும். புதிதாக காலூன்ற திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த் கட்சி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதில் கமல் கட்சி பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் பாமக இந்த கூட்டணியிலல் இடம் பெறும் என தமிழருவி மணியன் கூறிவிட்டார். பாமக இதுவரை அதற்கு மறுப்பும் கூறவில்லை. அனேகமாக இந்த கூட்டணியில் காங்கிரசும் இடம் பெறும் என கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்படி அமையும் கூட்டணியில், பாமக, காங்கிரசுக்கு அதிக தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு அமைகிறது.
உஷாராகும் அதிமுக
தமிழருவி மணியன் பேட்டிக்கு முன்பே, தமிழகத்தில் நடக்கும் அரசியல் மூவ்கள், அதிமுக தலைமையின் காதுகளுக்கு போய்விட்டன. உண்மையிலேயே, ரஜினி, திமுகவுக்கு எதிரியோ இல்லையோ, அதிமுகவுக்குதான் அவர் பெரும், ஆபத்து என்பதை உணர்ந்துள்ளது அதிமுக தலைமை. இந்த நிலையில்தான், ஜெயலலிதா பாணியில், மக்கள் கோரிக்கைகள் மற்றும் மாநில நலன்சார்ந்த திட்டங்களை அறிவிக்க தொடங்கிவிட்டது. திடீர் திடீரென உருளுதாம், உடையுதாம்.. என்ற திரைப்பட வசன பாணியில், எல்லாம் திடீர் திடீர் என நடக்க ஆரம்பித்துள்ளது.
அதிரடிகள்
5 மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்த நிலையில், சில தினங்கள் முன்பு திடீரென அதை வாபஸ் பெற்றுள்ளது அரசு. இது பெற்றோர் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதோ இன்று.. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் அறிவிக்கும் அளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு இது. ஆனால், அரசு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார் முதல்வர். அந்த அளவுக்கு, மக்களிடம் நற்பெயரை சம்பாதிக்க அதிமுக அவசரம் காட்ட தொடங்கியுள்ளது.
|
பாமகவிடம் நற்பெயர்
மக்களிடம் மட்டுமல்ல, இந்த இரு அறிவிப்புகளாலும் பாமகவிடம் நற்பெயரை ஈட்டிவிட்டது அதிமுக. இரு அறிவிப்புமே பாமகவுக்கு கிடைத்த வெற்றிதான் என்று அடித்து சொல்லிவிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பாமக வாக்குகள், அதிமுகவுக்கு கிடைத்து, திமுகவை எளிதாக வீழ்த்தியதை அவ்வளவு எளிதில் மறக்கவில்லை அதிமுக. பலமான பாமகவின் வாக்கு வங்கியை தக்க வைத்தால்தான், ரஜினிகாந்த் அலையை எதிர்க்க முடியும் என்பதை எடப்பாடியார் உணர்ந்துள்ளார். இதை பாமகவும் உணர்ந்துள்ளது. எனவேதான், தங்கள் டிமாண்ட் உயர்வை மவுனமாக ரசித்து வருகிறது. தமிழருவி மணியன் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அவர் பேட்டிக்கு பதில் சொல்லாமல் த்ரில் கிளப்புவதுதான் நமக்கு நல்லது என்ற முடிவில் இருக்கிறது மாம்பழ கட்சி.