தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு!!
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தகவல் ஆணைய அதிகாரிகளை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
எங்கள மாதிரி இல்லையே..
கடந்த 26 ஆண்டுகளாக பா.ம.க. பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களை நடத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சி தலைவர்களும் என்னைப் போன்று போராட்டங்களை நடத்தி இருக்க மாட்டார்கள்.
முக்கியமான போராட்டம்..
இதை நான் பெருமையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாகும்.
தகவல் ஆணையம்..
வெளிப்படைத்தன்மையான ஆட்சி செயல்பட வேண்டும் என்பதற்காக 2005-ம் ஆண்டு தகவல் உரிமை பெறும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தேசிய அளவில் தேசிய ஆணையமாகவும், மாநில அளவில் மாநில தகவல் பெறும் ஆணையமாகவும் செயல்படுகிறது.
அதிகாரிகள் எங்கே?
இந்த ஆணையத்துக்கு மக்கள் தொகைக்கேற்ப 10 ஆணையர்கள், ஒரு தலைமை ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் 4 ஆணையர்கள் மட்டும்தான் உள்ளனர். தலைமை ஆணையர் பணியில் இல்லை. இந்த 4 பேரில் 2 பேர் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். இதனால் பொதுமக்கள் தகவல் பெற முடியாத நிலை உள்ளது. இதிலும் ஊழல் பெருகி விட்டது.
அறிவிக்கப்படாத அவசர நிலை..
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பலம் வாய்ந்த ஆணையமாக செயல்படுத்துவோம். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.