பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்புதான்!: சொல்வது அன்புமணி ராமதாஸ்
சென்னை: 2016ஆம் ஆண்டு பா.ம.க. தலைமையிலான ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் முதலில் போடும் கையெழுத்து மதுவை ஒழிப்பதாகத்தான் இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
மது ஒழிப்பு போராட்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் நடத்துகின்றன. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இளைஞர்களை, பெண்களை காப்பாற்றுவதற்காக மது ஒழிப்பு போராட்டத்தை பா.ம.க. முன் எடுத்து நடத்தி வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். நிச்சயமாக பா.ம.க. தலைமையிலான ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் முதலில் போடும் கையெழுத்து மதுவை ஒழிப்பதாகத்தான் இருக்கும். வருகிற 17ஆம்தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 18ஆம் தேதி நாங்களே மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவோம்.
2000 மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் 2000 மதுபானக் கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ளன. அதில் 89 கடைகள் தர்மபுரி தொகுதிக்குள் வந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கும், சாலை விபத்திற்கும் மதுவே மூல காரணமாக உள்ளன.
2 லட்சம் உயிரிழப்புகள்
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் 33 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். பெண்களில் 10 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள். மதுவினால் மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
பெண்களை திரட்டுவோம்
இந்த விஷயத்தில் அரசியல் பார்க்காதீர்கள். அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தியுங்கள். மார்ச் மாதம் 31-ந்தேதி பூரண மது விலக்கை வலியுறுத்தி பெண்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
குழந்தைகளும் பதாகை ஏந்தி
இன்றைய தினம் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களும், குழந்தைகளும் மதுக்கடைகளுக்கு எதிரான பதாகைகளை தாங்கியிருந்தனர். மதுக்கடைகளை மூடக்கோரி முழக்கமிட்டனர்