தூத்துக்குடி பாமக மாவட்ட செயலாளரின் காருக்கு தீ வைப்பு.. மர்மநபர்களுக்கு போலீஸ் வலை!
பாமக நிர்வாகியின் காருக்கு மர்மநபர்கள் தீவைத்து தப்பி ஓடிவிட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாமக நிர்வாகியின் கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி சிறிது சிறிதாக திரும்பி வந்து கொண்டிருக்கிறது. கார்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து விட்டு தப்பி ஓடும் சம்பவங்கள் நடைபெற துவங்கியுள்ளது.
மாவட்ட பாமக மாவட்டச் செயலாளராக இருப்பவர் சின்னதுரை. இவர் நேற்றிரவு டூவி புரத்தில் உள்ள தனது கடையின் முன்னால் காரை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீயையும் வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் கார் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காருக்கு தீ வைத்து தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதேபோல, தூத்துக்குடி -அண்ணாநகர் பகுதியில் 2 கார்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன