பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு மக்களுக்கு ஏமாற்றம்- ராமதாஸ் கண்டனம்!
சென்னை: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூபாய் 1.50 உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த வரி உயர்வினால் மக்கள் அனுபவிக்க தொடங்கி இருக்கும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
உயர்த்தப்பட்டுள்ள கலால் வரி:
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 1.20லிருந்து ரூபாய் 2.70 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 1.46 லிருந்து ரூபாய் 2.96 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
நூறு சதவீதத்துக்கும் அதிகமான வரி:
இது பெட்ரோல், டீசல் விற்பனையைப் பொருத்த வரையில் 100 சதவீதத்துக்கும் அதிகமான வரி உயர்வாகும்.
5 ஆண்டுகளாக விலை ஏற்றம்:
2009 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலான 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 31ம்,டீசல் விலை ரூபாய் 30ம் உயர்த்தப்பட்டன.
விலை குறைவு இப்போதுதான்:
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை இப்போது தான் குறையத் தொடங்கியிருக்கிறது. அதன் பயனை மக்கள் இன்னும் முழுமையாக அனுபவிக்கவில்லை.
கண்டிக்கத்தக்க உயர்வு:
அதற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் அதிகரிக்கும் விலை:
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கும்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அளவுக்கு அதிகமாக உயரவே மத்திய அரசின் இந்த நடவடிக்கை வழி வகுக்கும்.
மத்திய அரசின் நடவடிக்கை:
எனவே, கலால் வரி உயர்வை ரத்து செய்து விட்டு பெட்ரோல், டீசலின் விலையைக் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.