ஜெ. உதவியோடு மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த சசிகலா குடும்பம் - ராமதாஸ் விளாசல்
மக்களின் வரிப்பணத்தில் சேர்க்கப்பட்ட சசிகலா குடும்பத்தின் ஊழல் பணம் மக்களிடமே சேரவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகளில் கைப்பற்றப்படும் பணத்தை மக்களிடம் வழங்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் 187 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரி சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கோடிக் கணக்கில் பணம், நகை, வைரம், சொத்துப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் போதிலும், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வருமான வரித்துறை இப்போது வரை வெளியிடப்படவில்லை.
சொத்து குவித்த சசிகலா குடும்பம்
சசிகலா குழுவினர் எத்தனை ஆயிரம் கோடி எப்படி எந்தெந்த வழிகளில் சம்பாதித்தனர். அவர்களின் பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் நாடறிந்த ரகசியம் தான். ஏதோ இந்த புதிய தகவல்கள் இப்போது தான் மத்திய அரசுக்கு வந்துள்ளது போல சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் தான் கடந்த 3 நாட்களாக சசிகலா மற்றும் அவரது பினாமிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்படுவது போலவும் தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஜெயலலிதாவின் ஆதரவில் சசிகலா
கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாளில் தொடங்கி கடந்த 27 ஆண்டுகளாக சசிகலா குடும்பம் தமிழகத்தை கொள்ளையடித்தும், சுரண்டிக் கொண்டும் தான் இருக்கிறது. சசிகலாவின் குடும்பம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக்கூட கொள்ளையடிக்கவில்லை. 16 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முழு ஆதரவுடன் தான் சசிகலா குடும்பத்தினர் தமிழ் நாட்டைக் கொள்ளையடித்தனர்.
மிரட்டலில் பணியவைக்கப்பட்ட சத்யம்
கடந்த காலங்களில் சசிகலாவும் அவரது குழுவினரும் சொத்துக்களை வாங்கிக் குவித்ததெல்லாம் மத்திய அரசுக்கு தெரியாமல் நடந்துவிடவில்லை. சென்னை வேளச்சேரியில் சத்யம் குழுமத்திற்கு சொந்தமான 11 திரைகள் கொண்ட லக்ஸ் திரையரங்க வளாகத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் நிறுவனம் மிரட்டிப் பறித்தது. இந்த திரையரங்கம் ரூ.1000 கோடிக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எப்படி வாங்கி இருக்க முடியும் ?
ஒரு சில லட்சங்களை முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஜாஸ் சினிமா நிறுவனத்தால் இவ்வளவு அதிக சொத்துக்களை எப்படி வாங்க முடியும்? என பா.ம.க.வும், பிற கட்சிகளும் வினா எழுப்பிய போது, அது குறித்து விசாரணை நடத்தியிருக்க வேண்டிய வருமானவரித் துறை. அப்போது ஜெயலலிதாவுக்கு பயந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை.
வளைத்த சசி, உதவிய ஜெ.,
சசிகலா மேலும் பல சொத்துக்களை வாங்கிக் குவித்த போதும், அவற்றை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம், அவற்றுக்கெல்லாம் வருமானவரித்துறை உதவியாகவே இருந்தது. 1991-96 ஆட்சிக் காலத்தில் கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் ஜெயலலிதா ஆசியுடன் சசிகலா வளைத்தார். அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயித்து ஊழல் பணத்தை வசூலித்தார்.
தோட்டங்களும், மாளிகைகளும்...
கொடநாடு தேயிலைத் தோட்டம், சிறுதாவூர் மாளிகை, பையனூர் மாளிகை உள்ளிட்ட சொத்துக்கள் இந்தக் காலத்தில் வளைக்கப்பட்டவை தான். அந்தக் காலத்தில் ஊழல் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களில் ஒரு பகுதி மட்டுமே கையூட்டுத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
சொத்துகளின் சந்தை மதிப்பு
சசிகலாவும் அவரது உறவினர்களுக்கு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கான அந்த வழக்கில் சிக்கிய சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். அதற்கு பிந்தைய 10 ஆண்டுகளில் அதைவிட 100 மடங்கு சொத்துக்களை அவர்கள் சேர்த்துள்ளனர். சசிகலாவின் உறவினர் தினகரன் மூலமாக உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
ஊழல் ஆட்சிக் காலம்
சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் ஊழல் செய்து குவித்து வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடிகளாகும். அவற்றை அவர்கள் தனியாக குவித்து விடவில்லை. 2011-16 ஆட்சிக் காலத்தில் தான் ஊழல் பூதம் உச்சக் கட்டத்தில் ஆட்டமாடியது. அதை ஆட்டுவித்தவர்கள் சசிகலாவும், அந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருப்பவர்களும் தான்.
திட்டங்களுக்கு கமிஷன் அடித்த அமைச்சர்கள்
அந்த ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.1.01 லட்சம் கோடியாகத் தான் இருந்தது. இப்போது ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.இடைப்பட்டக் காலத்தில் அணைகள், தடுப்பணைகள், கல்லூரிகள், பாசனத் திட்டங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படாத நிலையில், கடனாக வாங்கப்பட்ட நிதி முழுவதும் ஊழல் வழியில் சசிகலா மற்றும் அமைச்சர்கள் குடும்பங்களிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
எங்கிருந்தாலும் மீட்கப்பட வேண்டும்
வருமான வரி சோதனை நடத்தி, அதில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு தண்டம் விதித்து அவற்றை சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. ஊழல் மூலம் குவித்த சொத்துக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை மீட்டு வர வேண்டும். ஏனெனில், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்டது முழுவதும் மக்களின் வரிப்பணம் தான்.
மக்களின் வரிப்பணத்தில் ஊழல்
அந்த பணம் மீண்டும் அவர்களுக்கே சென்று சேர வேண்டும். அதற்காக, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் அரசை உடனடியாக அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் வரிப் பணத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.