தமிழகத்தில் ஆரம்பித்த வேகத்திலேயே முடங்கிப் போன ஸ்மார்ட் சிட்டி திட்டம்: ராமதாஸ் அறிக்கை
தமிழகத்தில் ஆரம்பித்த வேகத்திலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடங்கிப் போய் உள்ளதாக ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆரம்பத்தில் படு ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆரம்பித்த வேகத்திலே முடங்கிப் போய் இருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் 11 நகரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு அறிவித்தது. முதலில் அதற்கான பணிகள் வேகமாக துவங்கப்பட்டாலும் தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், வளர்ச்சித்திட்டங்கள் வேண்டுமென்றே இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
செலவு செய்யப்படாத நிதி
அறிவிக்கப்பட்ட 11 நகரங்களிலும் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சென்னையில் ஸ்மார்ட் சிட்டிக்கான திட்டம் ரூ.1366 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் கட்டமாக மத்திய அரசின் சார்பில் ரூ.196 கோடியும், மாநில அரசின் சார்பில் ரூ.200 கோடியும், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடியுமாக மொத்தம் ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியிலிருந்து இதுவரை ரூ.3.82 கோடி மட்டுமே, அதாவது 0.77சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நிதி இருந்தும் செயல் இல்லை
சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஆறு மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிதியில் இதுவரை ரூ.12.21 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கான முதல் கட்ட ஒதுக்கீட்டில் 0.61சதவீதம் மட்டுமேயாகும். பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த பெரும் தடையாக இருப்பது நிதி ஒதுக்கீடு தான். ஆனால், இந்த திட்டத்திற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
அதிகாரம் இல்லாத அமைப்புகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்தனியாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிறப்பு பயன்பாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். அவை தன்னிச்சையாக இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இதன் மூலம் பணிகளை விரைவாக முடிக்க இயலும். ஆனால், தமிழ்நாட்டில் சிறப்பு நிறு வனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த திட்டப்படி ரூ.6.50 கோடிக்கும் குறைவான திட்டங்களை மட்டுமே சிறப்பு நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படுத்த முடியும்.
சாத்தியமாகாத திட்டங்கள்
அதற்கும் கூடுதலான மதிப்புள்ள திட்டங்களை மாநில அளவிலான உயர் நிலைக்குழுவின் அனுமதி பெற்று தான் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பது தான் இந்த திட்டம் முடங்கிக்கிடப்பதற்கு காரணம் ஆகும். உதாரணமாக கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்திட்டம் அமைப்பதற்கு அனுமதி வாங்குவதற்கு சுமார் ஓராண்டு காலம் ஆகியிருக்கிறது. இதேநிலை நீடித்தால் இந்த திட்டங்கள் நிச்சயம் சாத்தியமாகாது.
உடனடி நடவடிக்கை
தமிழகத்தில் மட்டும் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான ஒவ்வொரு பணிக்கும் மாநில அளவிலான குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது முறையல்ல. ஒவ்வொரு திட்டப்பணிக்கும் தனித்தனியாக கையூட்டு வாங்க வேண்டும் என்பது தான் இந்த நிபந்தனையின் நோக்கம் ஆகும். ஆட்சியாளர்கள் ஊழல் செய்ய வேண் டும் என்பதற்காக வளர்ச்சித் திட்டங்களை முடக்கக்கூடாது. இதற்கு அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.