2020 வரை எல்கேஜி மாணவர் சேர்கை நிறைவு, 2021க்கு இப்போதே முன்பதிவு: சிஷ்யா பள்ளிக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை 2021 ஆம் ஆண்டுக்கான எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள் என்ற அடையாறு சிஷ்யா பள்ளியின் அறிவிப்புக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அடையாறில் செயல்பட்டு வரும் சிஷ்யா என்ற தனியார் பள்ளி 2020 ஆம் ஆண்டு வரையிலா எல்கேஜி வகுப்பு மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள் என அறிவித்துள்ளது. இதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எந்த விதிகளையும் கடைபிடிக்காத சிஷ்யா தனியார் பள்ளி மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் சிஷ்யா தனியார் பள்ளியில் விதிமுறைகளை மீறி 2020-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் சிஷ்யா என்ற தனியார் பள்ளியில் இளநிலை மழலையர் வகுப்புக்கு 2020 ஆம் ஆண்டு வரை மாணவர் சேர்க்கை முடிவடைந்து விட்டதாகவும், 2021-ஆம் கல்வியாண்டில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளும்படியும் பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கல்வி உரிமைச்சட்டதுக்கு எதிரானது
சர்ச்சைக்குரிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பள்ளி இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் பாடத்திட்டத்தை பின்பற்றிவருகிறது. தனியார் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் இந்த பள்ளி சிறுபான்மை பிரிவினருக்கான சலுகைகளை முறைகேடாக அனுபவித்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான இந்த பள்ளியின் விதிகள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானவை ஆகும்.
பிறந்த குழந்தைகளுக்கு முன்பதிவு?
கல்வி எப்படி வணிகப்பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும். நடப்பாண்டில் பிறந்த குழந்தைகளை மட்டும் தான் 2021-ஆம் ஆண்டு இளநிலை மழலையர் வகுப்பில் சேர்க்க முடியும். 2021-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவிப்பதன் மூலம் இப்போது பிறந்த குழந்தைகளை மாணவர் சேர்க்கைக்காக உடனடியாக தங்களை அணுகும்படி பெற்றோரை சிஷ்யா பள்ளி நிர்வாகம் தூண்டுகிறது. இது குழந்தைகளின் உரிமைகளையும், பெற்றோரின் உரிமைகளையும் மீறும் சட்ட விரோத செயலாகும்.
முன்கூட்டியே விண்ணப்பங்கள் வழங்கக்கூடாது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் ஆகிய பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல்- மற்றும் மே மாதங்களில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கைத் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு முன்பாகவும், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மார்ச் மாதத்திற்கு முன்பாகவும் விண்ணப்பங்கள் கூட வழங்கப்படக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எந்த அமைப்பு அதிகாரம் வழங்கியது?
இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் பாடத்திட்ட பள்ளிகளின் கல்வியாண்டு ஜுன் மாதத்தில் தான் தொடங்கும் என்பதால் அப்பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அதற்கு முந்தைய ஏப்ரல்- மே மாதங்களில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் 2017-18 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையையே இப்போது அந்த பள்ளி மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு இருக்கும் போது 2020 வரையிலான 4 ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கையை எந்த அடிப்படையில் சிஷ்யா பள்ளி மேற்கொள்ள முடியும்? இதற்கான அதிகாரத்தை அந்த தனியார் பள்ளிக்கு எந்த அமைப்பு வழங்கியது?
சிஷ்யா பள்ளி பின்பற்றுவதில்லை
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை என்பது குலுக்கல் முறையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சிஷ்யா பள்ளியில் 3 வயது மட்டுமே நிரம்பிய பிஞ்சுகளுக்கு நுழைவுத்தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் என கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இவை தவிர பெற்றோர்களுக்கும் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால், இப்பள்ளியில் சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தையும் சிஷ்யா பள்ளி பின்பற்றுவதில்லை.
மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்
ஒரு பள்ளி எந்த பாடத்திட்டத்தை பின்பற்றினாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். இதை கல்வி வாரியங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், எந்த விதிகளையும் கடைபிடிக்காத சிஷ்யா தனியார் பள்ளி மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.
சிஷ்யா தனியார் பள்ளியில் விதிமுறைகளை மீறி 2020-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்
கடந்த காலங்களில் அப்பள்ளியில் எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்பது குறித்து கல்வியாளர்கள் குழுவை நியமித்து ஆய்வு செய்து, விதிகள் மீறப்பட்டிருந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிஷ்யா உள்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளிப்படையான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்பதை வட்டார அளவில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்.