செல்லூர் ராஜூவுக்கு சிறந்த சீடர் பொள்ளாச்சி ஜெயராமன் : ராமதாஸ் கிண்டல்
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியதை வைத்து ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இந்த ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையோடு தொடங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், நீரா பானம் குறித்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், 'தமிழக அரசு விரைவில் நீரா பானத்தை பொது விநியோக பயன்பாட்டிற்காக அறிவிக்கவுள்ளது. நீரா பானமும் தாய்ப்பாலும் வெவ்வேறானவை கிடையாது. இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை' என்றும் அவர் பேசி உள்ளார்.
அன்னை தெரேசா பாராட்டு
ஜெயலலிதா குறித்து அவர் பேசும்போது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும். பெண் சிசுக்கொலையைத் தடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. 1992ம் ஆண்டு அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தைத் திட்டத்த அன்னை தெரேசாவே பாராட்டி இருந்தார்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
|
ஜெயலலிதாவிற்கு நோபல்
இதை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 'அமைதி, இலக்கியம், அறிவியலுக்கு தான் நோபல் பரிசு உண்டு, ஊழலுக்குமா உண்டு' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
|
தண்டனைக்கு என்ன பரிசு ?
மேலும், 'தொட்டில் குழந்தை திட்டத்துக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால், ஊழல் செய்ததற்கு 100 கோடி ரூபாய் தண்டமும், 4 ஆண்டு சிறை தண்டனையும் விதித்ததே நீதிமன்றம்.அதற்கு என்ன விருது வழங்குவது' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
|
இறந்தவருக்கு நோபல் பரிசா ?
உச்சகட்டமாக, 'இறந்தவர்களுக்கு நோபல் பரிசு கூட வழங்குவதில்லை என்பது கூட பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தெரியாதா ? இவர் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு சிறந்த சீடர்' என்றும் அந்த பதிவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டு உள்ளார்.