மத்திய அரசில் 27% வேலை வாய்ப்பு இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை: ராமதாஸ் ஆதங்கம்
27% இடஒதுக்கீடு இன்னும் முழுமையடையவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு முழுமையடையவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை வெளியிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி இதனை விவரித்துள்ளார் ராமதாஸ்.
அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் '' 01.01.2017 வரை 'ஏ' பிரிவு பணிகளில் 14 சதவிகிதமும், 'பி' பிரிவு பணிகளில் 15சதவிகிதமும் , 'சி' பிரிவு பணிகளில் 17சதவிகிதமும் , 'டி' 18 சதவிகிதமும் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைத்த அநீதி'' என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் '' மத்திய அரசில் உள்ள 37 துறைகளில் எதிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சரியாக வழங்கக்கப்படவில்லை. 31 லட்சம் மத்திய அரசு பணியாளர்களில் 2.71 லட்சம் பணிகளுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் மட்டுமே சரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இதில் நிறைய குளறுபடிகள் நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''மத்திய வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு 1990ல் வி.பி. சிங் ஆட்சியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான நடைமுறைகள் 1993ல் வழங்கப்பட்டது. ஆனாலும் அதிகாரம் மிக்க பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனுமதிக்கப்படுவதே இல்லை. இது மிகவும் கொடுமையானது.'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு கிடைக்க பெரும் தடையாக இருக்கும் விஷயங்களை தகர்த்து ஏறிய வேண்டும். அதில் உள்ள குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும். அது வரை மத்திய வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு என்பது கனவாகவே இருக்கும்'' என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் '' பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சரியாக கிடைக்கும் வகையில் சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த குறையை போக்க முடியும். சிறப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பிற்படுத்தப் பட்டோருக்கு முழுமையான சமூக நீதியை வழங்க வேண்டும்'' எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.