சிறப்பு பூஜை; அன்னதானம்; கூட்டு வழிபாடு - காடுவெட்டி குருவுக்காக நடக்கும் பிரார்த்தனைகள்
காடுவெட்டி குருவுக்காக நடக்கும் சிறப்பு பூஜைககளை நடத்துகின்றனர் பாமக நிர்வாகிகள்.
Recommended Video
சென்னை: 'இன்று அண்ணன் ஜெ.குரு, பூரண குணமடைய முருகன் கோவிலில் பாலபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்'
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பா.ம.க வாட்ஸ்அப் குழுக்களில் தினம்தோறும் இப்படியொரு தகவல் பகிரப்படுகிறது.
'ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, தொண்டர்கள் தீச்சட்டி ஏந்தியதுபோலவே குருவுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் பா.ம.கவினர். நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டிகுரு.
செயற்கை சுவாசக்கருவியின் உதவியோடுதான் அவர் சுவாசித்து வருகிறார். கடந்த சில வாரங்களாகவே அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான பாதிப்புகள் இருந்து வந்தன. தொண்டையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறுவை சிகிச்சையின் விளைவாகத்தான், நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டது.
'கத்திப் பேசுவதைக் குறையுங்கள்' என அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து, மேடைகளில் குருவைப் பார்ப்பது என்பதே அரிதாகிப் போனது. அப்போலோ மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் குரு. 'இன்டெஸ்டிடியல் லங்க்ஸ் டிசீஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய்ப் பிரிவின் தலைவரும் பேராசிரியருமான சி.ஜி. கில்னானி (ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்), அந்தத் துறையின் முன்னாள் தலைவரும், எய்ம்ஸ் இயக்குனருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா ஆகியோரின் ஆலோசனைப்படி, குருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ' எனது மூத்த பிள்ளையைப் போன்று நான் கருதும் குரு வெகுவிரைவில் முழுமையான உடல்நலம் பெற்று நம்முடன் இணைந்து பணியாற்றுவார்' என உருக்கமான அறிக்கை வெளியிட்டார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
இந்நிலையில், குரு நலம் பெறுவதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ம.க நிர்வாகி ஒருவர், "மீண்டும் வன்னியர் சங்கப் பணிகளுக்கு குரு திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காகத்தான் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், கூட்டு வழிபாடு எனச் செய்து கொண்டிருக்கிறோம். கட்சிப் பணிகளைவிடவும் குரு மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுதல். இதற்காக தெருவில் இருக்கும் சிறு அம்மன் கோவிலைக்கூட நாங்கள் விடுவதில்லை. தினம்தினம் பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.