இந்த ஆண்டு களப்போராட்டங்கள் இதோ... எந்த கட்சியும் செய்யாததை "பட்டியலிட்ட" பாமக
தமிழகத்தின் மக்களுக்கு பாமக மேற்கொண்ட களப்போராட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அந்த கட்சியினர் பட்டியலிட்டுள்ளது மிகவும் வித்தியாசமாக உள்ளது.
சென்னை: தமிழகத்தின் மக்களுக்காக இந்த ஆண்டில் பாமக என்னவெல்லாம் செய்தது என்பது குறித்து அக்கட்சியினர் பட்டியலிட்டுள்ளது மற்ற கட்சியின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்தியே காண்பிக்கிறது.
பொதுவாக புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் நாம் இந்த ஆண்டில் என்னென்ன செய்தோம். எந்த பழக்கத்தை கற்றுக் கொண்டோம், எந்த பழக்கத்தை விட்டுவிட்டோம், எந்த இடத்தில் நாம் தவறு செய்தோம், மற்றவர்களுக்கு நாம் என்ன உதவி செய்தோம் என்பது தொடர்பாக யோசிப்பது உண்டு.
அதுபோல் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நம் கட்சி சார்பில் என்னென்ன மாதிரியான போராட்டங்களில் பாமக கலந்து கொண்டது என்பது குறித்த விவரங்களை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவினர் படங்கள்,பேனர்களுடன் உருவாக்கியுள்ளனர்.
|
என்ன போராட்டங்கள்
2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை, அதாவது கும்பகோணத்தில் வறட்சியோல் டெல்டா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கோரி தொடர் முழக்க போராட்டம் நடத்தியது முதல் கன்னியாகுமரி மீனவர்களின் உயிரை காப்பாற்றத் தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் நடந்த போராட்டம் வரை அத்தனையும் இதில் அடங்கியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்தவை
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளின் பேனர்கள் மீது இது சட்டவிரோத கடை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி மூட வேண்டிய கடை என்று பாமகவினர் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தினர். அதே மாதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக் கோரி பாமகவினர் நெடுவாசலில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
டெல்லி போராட்டம்
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கச்சத் தீவை மீட்கக் கோரி போராட்டம், மீனவர்களுக்கான போராட்டம், நீட் தேர்வுக்கான போராட்டம், அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி பிரசாத பயணம், புதிய பாடத்திட்டங்கள் மீதான வரைவு அறிக்கை தாக்கல், மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மை திட்டம், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுவதற்கு போராட்டம், பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நீதி மாநாடு, கன்னியாகுமரி மீனவர்களை மீட்கக் கோரி போராட்டம் என பல்வேறு மக்கள் நலன் போராட்டங்களை பாமக முன்னெடுத்துள்ளது.
இதுபோல் யாரும் செய்ததில்லை
இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒன்றை பாமக கையில் எடுத்துள்ளது. இது அரசியல் யுத்தி என்பதை காட்டிலும் புது வகையான யுத்தி. ஏற்கெனவே பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சுகள் இளைஞர்களிடம் உத்வேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இவரது இந்த புது முயற்சி இளைஞர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.