பாமகவின் முன்னாள் எம்எல்ஏ ஜெ.குரு மரணம்... கடைகள் அடைப்பு.. 100 அரசு பேருந்துகள் மீது தாக்குதல்
வன்னியர் சங்கத் தலைவர் குரு காலமானதைத் தொடர்ந்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, 100 அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை: பாமக முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு காலமானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ.குரு, கடந்த 40 நாட்களுக்கும் மேல் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையொட்டிநேற்று முன் தினம் இரவு அரியலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் அந்த மாவட்டம் முழுவதும் 12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.
சென்னை செல்லும் பேருந்துகள்
இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்து இயங்கவில்லை. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல் தஞ்சையிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் திருச்சி வழியாக இயக்கப்பட்டன.
4 பேருந்துகள்
கும்பகோணம், சுவாமி மலை, திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. நாகை மாவட்டத்தில் 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. அப்போது எருக்கூரில் நடந்த தாக்குதலின் போது பஸ் டிரைவர் காயமடைந்தார்.
100-க்கும் மேற்பட்ட பேருந்துகள்
கடலூர், விழுப்புரம், புதுவை ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதுபோல் வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஏராளமான பேருந்துகள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டன.
பேருந்து ஓட்டுநர் காயம்
பெரும்பாலான இடங்களில் திறக்கப்பட்ட கடைகள் மீதும் பாமகவினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் கடைகள் திறக்கப்படவில்லை. சேலத்தில் நடந்த கல்வீச்சில் பயணியும், பேருந்து ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்தனர்.