For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016ல் தமிழகத்தை ஆளப்போவது நாங்கதான்… அடித்துச்சொல்லும் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறிவிட்டார். பாமகவும், தேமுதிகவும் வெளியேற்றப்படலாம் என்று ஆருடங்கள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவிற்கே செக் வைக்கும் வகையில் பேசி வருகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்கும் என்று அடித்துச்சொன்னார் டாக்டர் ராமதாஸ். அதை காடுவெட்டி குருவும் வழிமொழிந்தார். 2010ஆம் ஆண்டில் திமுக தலைவர் கருணாநிதி இதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கூட கூறினார்.

PMK invites parties sans BJP for 2016TN polls alliance

ஆனால் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக திமுகவுடன் கூட்டணி பந்தி போட்ட பாமக சில இடங்களில் மட்டுமே வென்றது.

இதனையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று பேசிய ராமதாஸ், 2014 லோக்சபா தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்தித்தார்.

பரமவைரியான தேமுதிக உடன் இணைந்து தேர்தலை சந்தித்த கூத்தும் நடைபெற்றது இந்த லோக்சபா தேர்தலில்தான். தமிழக முதல்வர் கனவோடு இருக்கும் வைகோ, விஜயகாந்த், அன்புமணி ஆகிய மூவரும் அந்த தேர்தலில் ஒன்றிணைந்தனர்.

ஆனால் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வென்று வெற்றிவாகை சூடியது. இணைந்து போட்டியிட்ட கட்சிகளின் வாக்குகளோடு ஒப்பிடும் போது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது அதிமுக. இதனால்தான் தேர்தல் களத்தில் தனக்கு எதிரிகளே இல்லை என்று கர்ஜித்தார் ஜெயலலிதா. இது அனைத்து எதிர்கட்சிகளையும் சீண்டிவிட்டது.

அதேசமயம் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படவே எதிர்கட்சியினர் அனைவருக்குமே தமிழக முதல்வர் ஆசை மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

முதன்முதலாக பாஜக கூட்டணியில் துண்டுபோட்ட வைகோ, அதிரடியாக வெளியேறினார். இனி புதிய கூட்டணியை அவர் நாடுவார். திமுக உடன் இணக்கமாக இருப்பது போல பேசினாலும் அங்கே கூட்டணி இல்லை என்கிறார்.

அதே சமயம், அன்பு சகோதரி ஜெயலலிதா என்று பேசிவரும் வைகோ, மது விலக்கை அமல்படுத்தினால் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவிற்காக பிரசாரம் செய்வேன் என்று கூறி அதிர வைக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை.

தமிழகத்தில் இப்போது பாஜக கூட்டணியில் நீடிப்பது பாமக, தேமுதிக தான். இந்த கட்சிகளில் உள்ள இருவருக்குமே முதல்வர் கனவு இருக்கிறது. தங்கள் தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் சேரவேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.

வெட்கக்கேடு

இதை உணர்த்தும் விதமாகவே மானமுள்ள யாரும் திமுக, அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார்கள். அந்த கூட்டணிக்கு போக வெட்கப்படவேண்டும் என்கிற ரீதியில் இன்று பேசியுள்ளார் ராமதாஸ்.

எங்கள் தலைமையில்

நேற்று தர்மபுரியில் பேசியபோதே, பா.ஜ கட்சி எங்கள் தலைமையை ஏற்றால் சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடலாம் என்றும் ராமதாஸ் செக் வைத்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வரமுடியாதா?

தமிழகம் பா.ம.க முழுதும் வளர்ந்துள்ளது. திடீரென்று முளைத்த ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. புதுச்சேரியில் தொடங்கிய என்.ஆர். காங்கிரஸ் அங்கே ஆட்சியை பிடித்தது. 15 ஆண்டுகளாக வளர்ந்து வரும் பா.ம.க தமிழக ஆட்சியை பிடிப்பது மட்டும் நடக்காதா? நிச்சயம் நடக்கும் என்றும் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

அவமானமாக இருக்கிறது

ரயில்வே போட்டி தேர்வில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சமீபத்தில் பதவி இழந்த முதல்வர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் மானம் பறிபோகிறது. இது புரியாமல் அவரது கட்சிக்காரர்கள் அவரை மக்கள் முதல்வர் என பேசிவருகிறார்கள். தண்டனை பெற்றபிறகும் ஜெயலலிதா திருந்தவில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் கேட்டுள்ளார்.

மாற்றுஅணி

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் பேசிய ராமதாஸ், தங்களின் தலைமையின் கீழ் மாற்றுஅணி அமையும் என்று பேசினார். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது போகும் இடங்களில் எல்லாம் 2016ல் ஆட்சியை பிடிப்போம் என்று பேசி வருகிறார்.

கூட்டணி வைத்தது ஏன்?

1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி முதன்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. பின்னர் திமுக, அதிமுக என் மாறி மாறி கூட்டணி அமைத்து 1998 முதல் 2009 வரை மத்திய அரசிலும் பங்கேற்றது. அப்போது தெரியாதா திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்று. அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றுக்கொண்டுதானே இருந்தது ராமதாஸ் ஐயா என்று கேட்கின்றனர் பாட்டாளி வர்கத்தினர். 2016ல் பாமக தனித்து போட்டியிடுமா? அல்லது யார் தலைமையில் தேர்தலை சந்திக்கிறது என்று தேர்தல் வரும் போது தெரியும்

English summary
Charting its own course for the 2016 Tamil Nadu assembly elections, PMK, an ally of NDA, today invited eight smaller parties to be part of a front to be led by it to put an end to the alternate rule by AIADMK and DMK since 1967.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X