விழுப்புரம்: காவல்நிலையம் எதிரே பாமக பிரமுகர் வெட்டிக்கொலை... பதற்றம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பாமக பிரமுகர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காவல் நிலையம் எதிரே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலைசெய்யப்பட்ட நபரின் பெயர் அருள்மணி என்பதாகும். இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளரான இவர், நேற்று இரவு கண்டமங்கலம் காவல் நிலையம் அருகே நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, விழுப்புரம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அருள்மணியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அருள்மணி முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.