தொடரும் மழை பலி.. மக்களைப் பாதுகாப்பதில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது - ராமதாஸ் காட்டம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்கசிவு விபத்துகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை : மழை தடுப்பு நடவடிக்கைகளில் இருந்தும், மின்கசிவு உயிர்பலியில் இருந்தும் மக்களைக் காப்பாற்றுவதில் தமிழக அரசு தவறிவிட்டது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தின் பெய்து வரும் மழையால் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை;
திருவாரூர் மாவட்டம் மணலகரத்தைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள் வயலில் மழை நீரை அகற்றச் சென்றபோது, அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
அதுபோல சென்னை கொடுங்கையூரில் சிறுமிகள் இருவர் மின்சாரம் தாக்கி பலியாயினர். இதற்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று மின்கசிவு சார்ந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் இருந்து தமிழக அரசும், மின்சாரவாரியமும் படுதோல்வி அடைந்துவிட்டன.
மக்களின் கேள்விகளுக்கு அரசின் அலட்சியமே பதிலாக இருக்கிறது. இனியாவது தனது தவறுகளில் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு 25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதி ஏற்ற அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.