கடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்
கடலூரில் இளைஞர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை கோரி ராமதாஸ், வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர் : கடலூர் அருகே சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை சிலர் தீவைத்து எரித்துக் கொன்றனர். இதில் சரியான நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதுபோல, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளவில் இழப்பீடு வழங்கக் கோரியும், இதுவரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
வாலிபரை எரித்த கட்சியினர்
சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன் ஐ.டி.ஐ படித்து விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன் சாத்தாவட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த சிலர், அவரை வழிமறித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். தீயின் கொடுமை தாங்க முடியாமல் ஆனந்தன் ஓலமிட்டதைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஓடிவந்து ஆனந்தனை மீட்டனர். உடல் முழுவதும் 90% தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்
நடவடிக்கை எடுக்காத காவல்துறை
பலியான வாலிபர் இறக்கும் முன் தன்னை எரித்தவர்கள் யார், அதற்கு என்ன காரணம் என்று வீடியோவில் தெரிவித்து உள்ளார். ஆனால், இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றச்செயல்களில் போலீஸாரின் துணையோடு ஈடுபட்ட சிலரை தட்டிக்கேட்டதாலேயே ஆனந்தன் எரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆனந்தனைக் கொலை செய்த குற்றவாளிகள் மட்டுமின்றி பின்னணியில் இருந்து இயக்கிய குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆனந்தன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இரு நாட்களில் இதைச் செய்யத் தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
இழப்பீடு கொடுக்க கோரிக்கை
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனந்தனைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியின் பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் காவல்துறை தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்து போன வாலிபரின் குடும்பத்திற்கு ஒரு கோடிக்கும் குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.