ஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு
மத்திய அரசின் ஆணைகளை ஏற்று ஒரு தலைமுறையின் கல்வி அறிவை தமிழக அரசு அழித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களின் மூலமாக ஒரு தலைமுறையின் கல்வி அறிவை தமிழக அரசு அழிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கை காட்டும் திசையில் கண்ணை மூடிக் கொண்டு பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ள தமிழக அரசு, இந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காகத் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்து வருகிறது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டப்பூர்வமாக்கப் பட்டது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவது குறித்து பரிந்துரைக்க 2012&ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம் போல முடிவெடுத்துக் கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன. மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பதற்கிணங்க, பாரதிய ஜனதா வழியில் தமிழக அரசும் எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு, பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்புகளை காவு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.
கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து, மலர வேண்டிய கல்வி மொட்டுகளை கருக்கி விடக் கூடாது. எனவே, 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களை கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசின் இந்த முடிவால் ஒரு தலைமுறையினரின் கல்வி முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.