தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் பாமக சார்பில் தொடர் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் தொடர் ஆற்று மணல் கொள்ளையால் தமிழகத்தின் நீராதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், புதியதாக மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகள் இன்று முதல் கோரப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவ்வாறு புதிய குவாரிகள் திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
புதிதாக 21 குவாரிகள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று முதல் கோரப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். முதற்கட்டமாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் 21 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடனான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது.
மணல்குவாரிகளுக்குத் தடை
தமிழ்நாட்டில் சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது ஆற்று மணல் கொள்ளை தான். அதைக் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று கடந்த 29.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்திருக்கிறதே தவிர, தமிழக அரசின் மணல் கொள்ளையை அங்கீகரிக்கவில்லை.
புதிய குவாரிகளுக்கு அனுமதி இல்லை
இதுதவிர தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக, மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற தீர்ப்புக்குத் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதே தவிர, புதிய குவாரிகளைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை.
உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையோ, மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலமாகத் தான் தடை விதித்திருக்கிறது என்பதையோ மதிக்காமல் அடுக்கடுக்காக புதிய மணல் குவாரிகளை தமிழக அரசு திறந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். புதிதாக திறக்கப்படவுள்ள 21 குவாரிகளில் 9 குவாரிகள் காவிரி பாசன மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன.
பாசன மாவட்டங்கள் பாதிப்பு
இவை தவிர திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய வட மாவட்டங்களில் தலா 3 குவாரிகள் வீதம் 12 மணல் குவாரிகள் திறக்கப்படவுள்ளன. காவிரி பாசன மாவட்டங்கள் தான் மணல் குவாரிகளால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்திருப்பதுடன், கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்திருக்கிறது.
மணல் பற்றாக்குறை
இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மணல் பற்றாக்குறை நிலவுவதும், அதனால் கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் உண்மை தான். தரமான செயற்கை மணலை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தல் ஆகியவற்றின் மூலம் இதை சமாளிக்க முடியும். ஆனால், இதையெல்லாம் செய்யாமல், இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பனை செய்ய விடாமலும், செயற்கை மணல் உற்பத்தியைக் குறைத்தும் செயற்கையான மணல் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்.
புதிய குவாரிகள் தேவையில்லை
அதன் மூலம் மணல் குவாரிகளை திறந்து கோடிகளை குவிக்க வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம் ஆகும். மக்கள் நலனையும், சுற்றுச்சூழலையும் விரும்புபவர்களால் இதை அனுமதிக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதுடன், ஏற்கனவே உள்ள மணல் குவாரிகளையும் மே மாதத்திற்குள் மூட வேண்டும். இல்லாவிட்டால் புதிய மணல் குவாரிகளின் முன்பாக மக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.