பூரண மதுவிலக்கு, இலவசக் கல்வி, பாதுகாக்கப்பட்ட இலவச குடிநீர்: பாமக நிழல் பட்ஜெட்
சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கு உடனடி அமல், பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயம், ஊடக நிகழ்ச்சிகளில் பிற மொழிகள் கலப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயத்துக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக அரசுக்கான 13-வது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இந்த அறிக்கையில், நிதி மேலாண்மை, வருவாய், நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு திட்ட வடிவங்களை பாமக முன்வைத்துவருகிறது.
அந்த வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிழல் நிதிநிலை அறிக்கையில், கல்வி, சுகாதாரம், விவசாயத்துக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
2015-16 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ.2,78,656 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1,02,605 கோடி அதிகம் ஆகும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.85,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்திருப்பதன் மூலமும் தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.2,78,756 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,40,705 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.40,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.
2015-16 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.1,871 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.100 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். மூலதனக் கணக்கில் ரூ.38,051 கோடி செலவிடப்படும்.
பின்தங்கிய மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் கல்வி, வாழ்க்கை நிலை ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள தருமபுரி, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, வேலூர், கிருட்டிணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
12 அம்சத் திட்டம்
ஊழலை ஒழிப்பதற்காக 12 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரி ஊழல் ஒழிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டு, அவரிடம் ஊழல் ஒழிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஏதேனும் துறையில் ஊழல் நடந்தால் அதற்கு அதன் தலைமை அதிகாரியே பொறுப்பாவார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
லோக் அயுக்தா அமைப்பு
ஊழலை ஒழிப்பதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:
லோக் அயுக்தா தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும்.
முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லோக்அயுக்தா வரம்பிற்குள் கொண்டுவரப்படுவர். ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
ஊழல் அதிகாரிக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படுவதுடன், அவரது ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும்.
சேவை பெறும் உரிமை சட்டம்
பொதுமக்களுக்கு அனைத்து வகையான அரசு சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பொதுச் சேவைபெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
கண்ணியமான தேர்தல்
தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தேர்தலில் நல்லவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு ‘‘கண்ணியமான தேர்தல்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்.
கடன் சுமையை குறைக்க
தமிழக அரசின் ஆண்டுத்திட்டம் ரூ. 48,815 கோடியாக இருக்கும்; இதில் வேளாண்துறை திட்டங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் ரூ.13,688 கோடி.
தமிழக அரசின் நேரடிக்கடன் சுமையும், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையும் ரூ. 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்தக் கடன்சுமையை 5 ஆண்டுகளில் போக்குவதற்கான சிறப்புத்திட்டத்தை பா.ம.க. வகுத்திருக்கிறது.
காவல்துறைக்கு சுதந்திரம்
காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தமிழக காவல்துரையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 84.68 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும். எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 42ம், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.32-ம் கொள்முதல் விலையாக வழங்கப்படும்.
அரசு மானியம்
இலங்கைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படவுள்ளன. அப்படகுகள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டவுடன், அவற்றை சீரமைப்பதற்குத் தேவையான முழுத் தொகையையும் அரசே மானியமாக வழங்கும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பேருந்துகளில் சீரமைப்பு
பேரூந்துகளில் எரிபொருள் சிக்கனம், சிறப்பான பராமரிப்பு, நிர்வாக சீர்திருத்தம், வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அரசுப் போக்குவரக்கழகங்கள் இலாபத்தில் இயங்கும் நிலை ஏற்படுத்தப்படும்.
சாதாரண பேரூந்துகளில் கிலோ மீட்டருக்கு 5 பைசாவும், சொகுசு பேரூந்துகள் மற்றும் குளிரூட்டி வசதி கொண்ட பேரூந்துகளில் 8 பைசாவும் கட்டணம் குறைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை சுமார் 60சதவிகிதம் வரை குறைக்க நெடுஞ்சாலைகள் ஆணையத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவை
சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ. நீளப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படும். சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவை கோயம்பேடு வரை விரிவுபடுத்தப்படும்.
தமிழ் மொழி ஊக்குவிப்பு
ஊடக நிகழ்ச்சிகளில் பிற மொழிகள் வலிந்து கலக்கப்படுவது தண்டத்திற்குரிய குற்றமாக்கப்படும். மழலை வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி முறை கட்டாயமாக்கப்படும். பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தமிழ்வழிக் கல்விமுறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் கட்டாயமாக்கப்படும்.
சுகாதாரம், துப்புறவு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயைத் தடுக்க சுகாதாரம் பேணப்படுவது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
சுகாதாரம் மற்றும் துப்புரவை பராமரிப்பதற்கான அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.அனைவருக்கும் அனைத்து வகையான மருத்துவச் சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கு
பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் மரபு சார்ந்த தற்காப்புக் கலைகள் கற்றுத்தரப்படும். தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அந்தந்த பகுதியில் பயிலும் மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப கற்றல்&கற்பித்தல் முறைகள் அமைய வழிவகை செய்யப்படும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய தண்ணீர் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும். தண்ணீர் உரிமைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு குடிநீருக்காக எவரும் ஒரு காசு கூட செலவிடத் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
பணம் இழப்பீடு
எவரேனும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உருவானால், அதை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் குடிநீருக்காக செலவிட்டதைப் போன்று 10 மடங்குத் தொகை அவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.
பூரண மதுவிலக்கு
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். மதுக்கடைகளில் பணியாற்றும் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் ஊராட்சித் தலைவர், கிராமநிர்வாக அதிகாரி, காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோர் பொறுப்பேற்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.
இலங்கை இனப்படுகொலை
ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை இனப்படுகொலையாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டிப்பதற்கான தீர்மானத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டுவர வேண்டும்.