மாற்றத்தை மாநாட்டில் அரங்கேற்றிய பாமக.. அந்நியன் விக்ரம் பாணியில் வீடியோ காண்பித்த அன்புமணி
சென்னை: வண்டலூரில் நேற்று இரவு நடைபெற்ற பாமக மாநாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், பிரச்சார ஸ்டைலில் மாற்றத்தை கொண்டுவந்த மாநாடு என்பது கண்கூடு.
சென்னை வண்டலூரில் நேற்று பாமக, மாநில மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். வழக்கமான அரசியல் மாநாடாக இருக்கும் என்று வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவோம் என்று அறிவித்து தனித்து களமிறங்கியுள்ள பாமக, தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்திருந்ததை தொண்டர்கள் நேரில் காண நேரிட்டது.
அசத்திய திடல்
சட்டசபை ஜார்ஜ் கோட்டை முதல் செங்கோட்டைவரை செட் அமைத்து நடைபெறும் அரசியல் மாநாடுகளுக்கு மத்தியில், ஒரு பாப் இசை நிகழ்ச்சிக்கான மேடை போல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது மாநாட்டு திடல்.
நடுவராக மாறிய அன்புமணி
மேடையின் நடுவேயோ அல்லது ஓரத்திலோ அமைக்கப்படும், மைக்குடன் கூடிய போடியத்தில் நின்றபடிதான் அரசியல்வாதிகள் உரையாற்றுவது வழக்கமான மாநாடுகளில் பார்க்க கூடியது. ஆனால் அன்புமணியோ, காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஃபுட்பால் அம்பயரை போல நடமாடிக் கொண்டே உரையாற்றினார்.
இயல்பான பேச்சு
அன்புமணி உரையாற்றினார் என்பதைவிட தொண்டர்களுடன் பேசினார் என்றுதான் கூற வேண்டும். ஏதோ அண்டை வீட்டுக்காரர், மாலை வேளையில் ரோட்டில் நம்மை பார்த்து ஹாய் சொல்லி பேசத்தொடங்குவதை போல இயல்பாக இருந்தது அன்புமணி பேச்சு.
அந்நியனாக மாறினார்
அந்நியன் திரைப்படத்தில், இறுதிகட்ட காட்சியில், அந்நியன் விக்ரம் பெரிய ஸ்டேடியத்தில் தோன்றி, பின்பக்கம் பெரிய திரையில், நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை வீடியோ படம் போட்டு காட்டுவார். அதே பாணியில், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் தமிழகம் இப்போதிருக்கும் நிலை அன்புமணியின் பின்புறம் இருந்த பெரிய திரையில் அவ்வப்போது வீடியோக்களாக விரிந்தது.
தீர்வையும் சொன்னார்
வீடியோக்களுக்கு விளக்கம் சொல்லியபடி, குற்றச்சாட்டோடு நிறுத்தாமல், அதற்கு தன்னிடமுள்ள தீர்வுகளையும் வீடியோ பிரசன்டேசன் செய்தார் அன்புமணி. குற்றச்சாட்டோடு நிறுத்தும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தீர்வையும் போட்டுக்காட்டியது புது யுக்தி என்பதை மறுப்பதற்கில்லை.
வருவாய் ஈட்டல்
மதுவை ஒழித்தால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட அன்புமணி கூறிய திட்டங்களின் ஒரு தொகுப்பை பாருங்கள்: தமிழகத்தில் ஆற்றில் ஒரு யூனிட் மணல் எடுக்க ரூ.674 வசூலிக்கப்படுகிறது. வெளியே ஒரு யூனிட் மணலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். 5 ஆயிரம் யூனிட் மணல் அள்ளினால் ஆயிரம் யூனிட்டுக்குதான் கணக்கு தருவார்கள். இதன் முலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.
தாதுமணல் கொள்ளை
தாதுமணல் கொள்ளையை தடுத்தால் ரூ.50,000 கோடி அரசு கஜானாவுக்கு வருமானம் வரும். கிரானைட் கொள்ளையை தடுத்தால் 30,000 கோடி வருமானம் வரும். இவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே ஒரு ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும்.
கள்ளச்சாராய ஒழிப்பு
கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தனியாக இலவச போன் நம்பர் தருவோம். புகார் உண்மையாக இருந்தால் ரூ.10 ஆயிரம் பரிசளிக்கப்படும். ரகசியமும் பாதுகாக்கப்படும். அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். டாஸ்மாக்கில் 82 பேர் பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கவுரவமிக்க மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும்.
மது ஆலைகள் யாரிடம்
தமிழகத்தில் 12 மது ஆலைகளில் திமுகவுக்கு 6 அதிமுகவுக்கு 3 சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மது ஆலைகள் இருக்கிறது. மது விற்பனை முலம் திமுகவுக்கு ஆண்டுதோறும் ரூ.16 ஆயிரம் கோடி கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாக சொல்லும் ஸ்டாலின் மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் 6 மது ஆலைகளை மூட வைக்க முடியுமா?
லோக்ஆயுக்தா வரும்
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. இதற்கு ஒரே தீர்வு. ஊழல் பெருச்சாளிகளான அதிமுக, திமுக வேண்டாம். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். சுயாட்சி அந்தஸ்த்துடன் அது செயல்படும். ஆண்டு தோறும் முதல்வர், அமைச்சர்கள் சொத்து மதிப்பு வெளியிடப்படும். ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். முதல் கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். இதனால் முதல்வர் தவறு செய்தால் கூட தப்பிக்க முடியாது.
நேர்மை
சுகாதரத்துறை அமைச்சராக இருந்த போது 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் தண்டனை காலம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்காது.
பேச நேரம்
பாமக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறைகள் கடைபிடிப்போம். எதிர்கட்சிகளுக்கு எங்களை விட அதிகமாக பேச வாய்ப்பு அளிப்போம். 65 சதவீதம் நேரம் எதிர்க்கட்சிக்கும், 35 சதவீத நேரம் மட்டுமே ஆளும் கட்சிக்கும் தரப்படும்.
தமிழகத்துக்கு திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.