சென்னைவாசிகளுக்கு இலவச பஸ் பயணம், அனைவருக்கும் இலவச கல்வி: பாமக வரைவு தேர்தல் அறிக்கை
சென்னை: மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள வரைவு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலுக்கு பா.ம.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையை இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு பேசினார்.
"கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். பல தரப்பு மக்களிடமும் ஆசிரியர், அரசு அலுவலர், நெசவாளர்கள், விவசாயிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் அன்புமணி ராமதாஸ் இந்த வரைவு தேர்தல் அறிக்கை பற்றி விவாதிப்பார். ஜனவரி 25ம்தேதிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கு ஏற்ப இறுதி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனவரி மாதம் 25ம்தேதிக்குள் வெளியிடப்படும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
பாமகவின் 2016 சட்டசபை தேர்தலுக்கான வரைவுத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:
கல்வி
கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.
உயர் தொழில் நுட்ப கல்வி
தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
மருத்துவம்
தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது. புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான அதிகவிலை கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு உதவ தனி நிதியம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
வேளாண்மை
வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சிமருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆகவும் உயர்த்தப்படும்.உழவர்களின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது. நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம். தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மது ஒழிப்பு
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பாமக ஆட்சி அமைந்தபின் முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில்தான். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுதல், கள்ளச்சாரயத்தைத் தடுத்தல், குடிநோயர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
ஊழல் ஒழிப்பு
ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். முதல்வரும், அமைச்சர்களும் லோக் அயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். பொதுச்சேவை பெரும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
காவல்துறை
காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சுதந்திரமான காவல் ஆணையம் அமைக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும். காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும். காவல்துறையில் அனைத்து மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்துறை
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதல்வர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார். புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும். புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட விளைநிலமாக இருக்காது.
வேலைவாய்ப்பு
5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். சுய தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படும். முறைசாரா தொழில் தொடங்குவதற்காக அரசே உத்தரவாதம் அளித்து கடன் பெற்றுத் தரும். இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
ரூ.1 லட்சம் இலவசம்
அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம். குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்குடன் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த இரு ஆண்டுகளில் கழிப்பறை, சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும். சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரவில் தங்குவதற்கான வீடுகள் கட்டித் தரப்படும்.
சமூக நீதியும் இயற்கை வளப் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்; அனைத்து கிரானைட் மற்றும் தாதுமணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்படும். கிரானைட், தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.
இலவச பஸ் பயணம்
சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். சென்னையில் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் அமைக்கப்படும். சென்னையில் மிதிவண்டிப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு மானியம்
சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகள் தூய்மைப்படுத்தி அழகாக்கப்படும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீடு கட்டுவதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அரசு மானிய விலையில் வழங்கும். இது போல மேலும் பல வாக்குறுதிகள் வரைவு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.2000 ஓய்வூதியம்
60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.2000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அரசிடம் உள்ள ஆவணங்களின் படி இவர்கள் அடையாளம் காணப்பட்டு உதவி வழங்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் 100சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அகவிலைப்படியில் 50 சதவீத ஊதியத்துடன் இணைக்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
மின்மிகை மாநிலம்
தமிழகம் உண்மையாகவே மின்மிகை மாநிலமாகும் வகையில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின் கட்டணங்கள் குறைக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். நகரப்பகுதிகளில் குடிநீர் மற்றும் சமையல் பயன்பாட்டுக்காக 40 லிட்டர் உட்பட 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.