ஒரு பெண்ணைக் கூட வேட்பாளராக அறிவிக்காத பாமக இப்போது கூறும் சால்ஜாப்பைப் பாருங்கள்!!
சென்னை: பாஜக கூட்டணியில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஒரு பெண்ணைக் கூட வேட்பாளராக அறிவிக்காத பாமக, தற்போது சிதம்பரம் தனித் தொகுதியில் எதிர்பாராதவிதமாக பாமக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடியாகி அவரது மனைவியின் மாற்று வேட்பு மனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து நாங்களும் பெண்ணை வேட்பாளராக நிறுத்தி விட்டோமே என்று மரத்திலிருந்து தானாகவே கீழே மண்ணில் விழுந்த மாங்கனியும் இனிக்கும் என்பது போல பேசியுள்ளது.
பாமக தனது வேட்பாளர்களை அறிவித்தபோது அதில் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. இதுகுறித்து அது உரிய விளக்கமும் தர மறுத்து விட்டது.
இந்த நிலையில் சிதம்பரம் தனித் தொகுதியில் அக்கட்சி சார்பில் காங்கிரஸிலிருந்து கழன்று கொண்டு வந்த மணிரத்தினத்தை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவரது வேட்புமனு சரியில்லை என்று கூறி நிராகரித்து விட்டது தேர்தல் ஆணையம்.
இருப்பினும் மாற்று வேட்பாளராக மனு செய்திருந்த மணிரத்தினத்தின் மனைவி சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது பாமக வேட்பாளராகி விட்டார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 8 பேரில் 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சிதம்பரம் தொகுதியில் மட்டும் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.ஐ. மணிரத்தினத்தின் வேட்பு மனு சில காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அத்தொகுதியில் மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்திருந்த அவரது துணைவியார் வி.சுதாவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படிருக்கிறது.
இதன்மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பிலும் தமிழ்நாட்டில் பெண் வேட்பாளர் ஒருவரை களத்தில் நிறுத்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் வி.சுதா கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவராக கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.
நாட்டார்மங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை சிறப்பாக செயல்படுத்தியது உட்பட அவர் ஆற்றிய பணிகளை பாராட்டி ஐ.நா.வளர்ச்சித் திட்ட அமைப்பு, ஐ.நா. மகளிர் அமைப்பு, யுனிசெஃப் அமைப்பு, தில்லியில் உள்ள சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து விருது வழங்கி பாராட்டியுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி மகளிர் அரசியல் அதிகார நாள் விழாக் கொண்டாட்டங்களின் போது வழங்கப்பட்ட இந்த விருதை இந்திய அளவில் பெற்ற மூன்று பெண் ஊராட்சித் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பதும், தமிழகத்தில் இருந்து இவ்விருதைப் பெற்ற ஒரே ஊராட்சித் தலைவர் இவர் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒருவர் சிதம்பரம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் சிறப்பாக செயல்படுவார் என்பதில் ஐயமில்லை. எனவே, கடந்த ஐந்தாண்டுகளாக சிதம்பரம் மக்களவைத் தொகுதி பின்னடைவை சந்திப்பதற்கு காரணமாக இருந்த சக்திகளை வீழ்த்தவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரான வி.சுதாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஏன் முதலிலேயே இவரை வேட்பாளராக்கவில்லை..
இவ்வளவு சிறப்புகளுடன் கூடி சுதாவை விட்டு விட்டு ஏன் காங்கிரஸிருந்து ஓடி வந்த அவரது கணவரை வேட்பாளராக பாமக அறிவித்தது என்பது புரியவில்லை. மணியே சுதாவின் பெருமையை இவ்வளவு தூரம் பறை சாற்றியுள்ளபோது, தகுதி வாய்ந்த அவரைத்தானே முதலில் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், தலைையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக மணி பேசியிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.