பிளஸ் 2 தேர்வில் பெயில் ஆன மாணவர்களுக்கு பாமக சார்பில் தனிப்பயிற்சி வகுப்புகள்: ராமதாஸ்
சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களுக்கு பாமக சார்பில் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 90.60% மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அவர்களுக்கும் இத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் கோவை நிவேதா, திருப்பூர் பவித்ரா, இரண்டாம் இடம் பிடித்த விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யவர்ஷினி, மூன்றாவது இடம் பிடித்த பாரதி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவலை வேண்டாம்:
அதேநேரத்தில் இந்தத் தேர்வுகளில் சுமார் 9.40 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.
துணைத்தேர்வில் வெற்றி:
இதை சிறு சறுக்கலாகக் கருதி அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற பட்டப் படிப்போ, தங்களுக்கு பிடித்த வேறு படிப்போ படித்து வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். இதைத் தவிர வேறு எந்த சிந்தனைக்கும் மாணவ, மாணவியர் இடம் தரக்கூடாது.
வட தமிழகத்தில் இல்லை:
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது ஒரு வேதனையான உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும். தேர்ச்சி விகிதத்தில் முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.
கண்டுகொள்ளாத ஆளும் அரசு:
இந்த நிலையை மாற்ற கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும், கல்வித் தரத்தையும் உயர்த்த சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை ஆண்ட அரசோ, இப்போதும் ஆளும் அரசோ இதை கண்டுகொள்ளவில்லை.
6வது கல்வி அமைச்சர்:
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வித் திட்டத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால், இதுவரை 5 கல்வி அமைச்சர்கள் மாற்றப்பட்டு, இப்போது 6வது அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
கல்வித்திறன் மேம்பாடு:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களாக வருபவர்கள் குறுகிய காலத்தில் பதவி நீக்கப்படுவதாலும், அத்துறையில் அமைச்சர்களை விட செயலாளரே அதிகாரம் படைத்தவராக இருப்பதாலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடிப்படைக் கட்டமைப்புகள்:
ஆசிரியர் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படவில்லை. அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. வகுப்பறைகள் இல்லா பள்ளிகளும், கழிப்பறை இல்லா பள்ளிகளும் அவலத்தின் அடையாளச் சின்னமாய் இன்றும் உள்ளன.
ஒரு லட்சம் மாணவர்கள் தோல்வி:
ஆனால், ஆட்சியாளர்களுக்கோ கல்வித் துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த அக்கறையும் இல்லை. அதன் விளைவு தான் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் ஏறத்தாழ சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
பயனிளக்கும் வளர்ச்சி:
அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளின் தேர்ச்சி கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளை மேம்படுத்துவதன் மூலமாகத் தான் தமிழகத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. அதனால் தான் அனைத்து மாணவர்களும் சாதனையாளர்களாக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறது.
தனிப்பயிற்சி வகுப்புகள்:
12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதால் அவர்களை அடுத்த மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்குத் தனிப் பயிற்சி வகுப்புகளை நடத்த பா.ம.க முடிவு செய்திருக்கிறது.
பாமக சார்பில் பயிற்சி வகுப்புகள்:
அதன்படி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 12 வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களும், சமூக முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தனிப்பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளை நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.