இஸ்லாமியர்கள் குறைகள் நீங்கி நிறைவாழ்வு பெற்றிட... ராமதாஸ், வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ வாழ்த்து!
சென்னை: தியாகத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் நாளை கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி, இஸ்லாமியர்களுக்கு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில்,
தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறை தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே பக்ரித் கொண்டாடப்படுகிறது.
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும். இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளை உவகையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், யூதர்கள் என உலகின் பெரும்பான்மை மக்களால் மிகவும் மதிக்கப்படும் இறைத்தூதர் இபுறாகிம் (அலை) அவர்கள் இறை கட்டளையை நிறைவேற்றுவதற்காக தனது பாசமிகு மகன் பாலகன் இஸ்மாயில் (அலை) அவர்களையே அறுத்து பலியிட துணிந்தார். மகனும், மனைவி ஹாஜரா (அலை) அவர்களும் அதை மனதார ஏற்று தியாகத்திற்கு இலக்கணமாய் திகழ்ந்தனர். வரலாறு போற்றும் ஒரு குடும்பத்தின் தியாக நிகழ்வு இது.
இவர்களின் தியாக வாழ்வை நினைவுகூறும் விதமாக இறைவன் கடமையாக்கியதே புனித ஹஜ் கடமையும், இந்த தியாக திருநாளும்.
தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்நன்னாளில் மக்களிடையே அன்பும், சமாதானமும், சமதர்மமும் தழைத்திட, நம் நாட்டின் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படவும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற்றிடவும், ஏழைகள் வாழ்வு உயர்ந்திடவும் தியாகங்கள் பல செய்திட சபதமேற்போம். இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழவும், குறைகள் நீங்கி நிறைவாழ்வு பெற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அனைவருக்கும் எமது பக்ரீத் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் உயரிய நெறிமுறைகளை கடைபிடித்து வாழ போற்றுதலுக்குரிய போதனைகளைக் கற்பித்த பெருமகனார் நபிகள் நாயகம். இறைத் தூதரின் அளப்பரிய தியாகத்தை நினைவுகொள்கிற நாள் இந்த பக்ரீத் பெருநாள். அனைத்து இன மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான உறுதியை இப்பெருநாளில் ஏற்போம். ஜாதிய, மத அடிப்படையிலான வேறுபாடுகளையும் காழ்ப்புணர்ச்சிகளையும் களைந்து மாசற்ற மாந்தநேயம் தழைக்க இந்நன்னாளில் உறுதிகொள்வோம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.