தேமுதிகவை விட பாமகவுக்குத்தான் ரொம்ப டேமேஜ்.... ஆயிரம் ஓட்டுக்கே அல்லாடிய பரிதாபம்
இடைத்தேர்தல்களில் பாமக படுபரிதாபகரமான தோல்வியைத் தழுவி டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறது.
சென்னை: சட்டசபை இடைதேர்தல்களில் தேமுதிகவை விட படுமோசமாக அடிவாங்கியிருப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான்... போட்டியிட்ட 2 தொகுதிகளிலுமே ஆயிரம் ஓட்டுகளைப் பெறுவதற்கே பெரும் போராட்டத்தை அக்கட்சி எதிர்கொண்டிருப்பதுதான் பரிதாபமாகும்.
2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டது பாமக. ஆனால் 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது.
இதன்பின்னர் தனித்து போட்டி என்ற முழக்கத்தை பாமக முன்வைத்தாலும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. இதற்குப் பின்னர் 2016 தேர்தலில் தனித்தே போட்டி என முழங்கி படுதோல்வியைத் தழுவியது.
2 தொகுதிகளில் மட்டும் போட்டி
தற்போது 3 தொகுதி இடைத்தேர்தல்களிலும் தனித்தே போட்டி என களமிறங்கியது பாமக. ஆனால் கடைசி நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் மாம்பழ சின்னம் ஒதுக்கவில்லை என கூறி வேட்புமனுவை வாபஸ் பெற்றது பாமக.
டெபாசிட் போச்சு
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும் பாமக போட்டியிட்டது. இவற்றில் தஞ்சாவூரில் பாமக வேட்பாளர் குஞ்சிதபாதம்- 794; அரவக்குறிச்சியில் பாமக வேட்பாளர் பாஸ்கரன் 959 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்திருக்கின்றனர்.
5-வது இடத்தில் பாமக
கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதிகளில் பாமக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அரவக்குறிச்சியில் பாஜக, தேமுதிக கட்சிகளை விட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது பாமக. அரவக்குறிச்சியில் பாஜக- 2803; தேமுதிக- 1176 வாக்குகளை பெற்றிருக்கிறது. பாமக 959 வாக்குகளைப் பெற்ற நிலையில் அதற்கு அடுத்து நாம் தமிழர் கட்சி 753 வாக்குகளுடன் துரத்தி வருகிறது.
நாம் தமிழரைவிட குறைவு
ஆனால் தஞ்சையில் பாஜக, தேமுதிக, நாம் தமிழர்களை விட பாமகவுக்கு குறைவான வாக்குகள்தான் கிடைத்திருக்கிறது. தஞ்சையில் பாஜக- 3806; தேமுதிக-1534; நாம் தமிழர்-1192 வாக்குகளைப் பெற்றுள்ளன. பாமகவோ வெறும் 794 வாக்குகளை மட்டும்தான் பெற முடிந்தது.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்பதற்கு பாமகதான் சிறந்த உதாரணம்!