தேமுதிகவுக்கு மச்சான் கவலை என்றால் பாமகவுக்கு மகன் கவலை...!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு, தனது மச்சானுக்கு எம்.பி சீட் மற்றும் அமைச்சர் பதவி வாங்கியாக வேண்டுமே என்ற கவலை என்றால் தர்மபுரியில் வென்ற தனது மகன் அன்புமணியை எப்படியாவது மறுபடியும் மத்திய அமைச்சராக்கி விட வேண்டுமே என்ற கவலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு. இதனால்தான் இவரது கட்சியும் மோடி விழாவுக்கு ராஜபக்சே வருவதற்கு எதிர்ப்பு காட்ட முடியவில்லை. புறக்கணிக்கவும் மனம் இல்லாமல் போய் விட்டது.
மாங்காய் கனிந்து பழமாகப் போகும் நேரத்தில் அதை எதுக்கு வெட்டி ஊறுகாய் போட வேண்டும் என்ற எண்ணம்தான் டாக்டர் ராமதாஸுக்கு இப்போது பிரதானமாகி விட்டது போலும்.
இதனால்தான் ஈழப் பிரச்சினைக்காகவும், ராஜபக்சேவைக் கண்டித்தும் பலமுறை உரத்துக் குரல் கொடுத்த டாக்டர், இந்த முறை ராஜபக்சே பங்கேற்கப் போகும் விழாவுக்கு சரிசமமாக தனது மகனையும் அனுப்பி வைத்து பதவி வருவது எப்போதோ என்று தைலாபுரத்தில் காத்திருக்கிறார்.
மகன்.. மகன்.. மகன் மட்டுமே
பாமக இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் கூட கடைசி நேரத்தில் தனது மகன் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரியில் மட்டுமே தீவிரப் பிரசாரம் செய்தார் ராமதாஸ்.
உடம்பு சரியில்லை
மற்ற தொகுதிகளுக்கு இவர் போகவே இல்லை. தனது கட்சி வேட்பாளர்களுக்காக கூட இவர் வாக்கு கேட்டுப் போகவில்லை. கூட்டணிக் கட்சிகளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.
மகன் வென்றால் போதும்
தனது மகன் அன்புமணி வென்றால் போதும், அவருக்கு மட்டும் அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவர் இருந்து விட்டார் போலும்.
வன்னியர் சங்கம் கூட ஒத்துழைக்கவில்லை
பாஜகவுக்கு எப்படி ஆர்எஸ்எஸ் அமைப்போ அப்படித்தான் பாமகவுக்கு வன்னியர் சங்கம். ஆனால் இந்தத் தேர்தலில் தர்மபுரியைத் தவிர மற்ற பாமக தொகுதிகளில் வன்னியர் சங்கம் சரியாகவே வேலை செய்யவில்லையாம். பாமக வேட்பாளர்களுக்காக பாடுபடவே இல்லையாம். இதனால் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது ஜி.கே.மணி உள்படஅனைவருமே கடுப்பாக உள்ளனர்.
அதாய்யா முக்கியம்
ஆனால் டாக்டர் ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி அந்தக் குமுறலை கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள். முதலில் மோடி அமைச்சரவையில் எப்படி அமைச்சர் பதவி பெறுவது, என்ன துறை கிடைக்குமோ என்ற பெரும் கவலை மட்டுமே இப்போதைக்கு இரு டாக்டர்களுக்கும் உள்ளதாக கூறுகிறார்கள்.
ராஜபக்சேவை கிடக்கட்டும்
இந்த ஒரே எண்ணமே இப்போது அவர்கள் முன்பு இருப்பதால் ராஜபக்சே வருகையோ, அவருக்கு இந்திய அரசு விருந்து கொடுத்து ராஜ உபச்சாரம் செய்வது குறித்தோ, அந்த ராஜபக்சேவுடன் சேர்ந்து விழாவில் பங்கேற்பது குறித்தோ கண்களை உறுத்தவில்லை என்கிறார்கள்.
அமைச்சர் பதவிதான்...
பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவிதான் பிரதானம் என்றாகி விட்டதால்தான் மதிமுகவைப் போல புறக்கணிப்பு, கோபம், கோபாவேசம் என்றெல்லாம் போகத் தோன்றவில்லையாம் பாமகவுக்கு...