வன்னியர் கட்சி இமேஜை உடைக்க பாமக மாஸ்டர் பிளான்! உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தம்
சென்னை: 'வன்னியர் கட்சி' என்ற கருத்துருவாக்கத்தை தகர்த்து திமுக, அதிமுகவை போல நடுநிலை கட்சி என்ற கருத்தை உருவாக்க மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்த முயற்சியை செயல்படுத்த பா.ம.க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் விலகிவிட்டனர். அப்படியும், மொத்தம் 5.36 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றது. அதேநேரம், எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.
ஜாதி கட்சி
இந்த இழுபறி நிலைக்கு காரணம், ஜாதி கட்சி என்ற முத்திரைதான் என்று பாமக தலைமை கருதுகிறது. எனவே அந்த எண்ணத்தை பொதுவெளியில் மாற்ற முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
புதிய நிர்வாகிகள்
இதற்காக கட்சியின் அனைத்து நிலைகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறது. இதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. தன்ராஜ், புதா.அருள் மொழி, சிவ பிரகாசம் ஆகியோர் இதில் இடம் பெற்று உள்ளனர்.
உள்ளாட்சி அமைப்பு
இந்த குழு நகரம், நகராட்சி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று கட்சிக்கு புதியவர்களை அடையாளம் காணும். கடலூர் மாவட்டத்தில் முதலில் இந்த குழு புதியவர்களை அடையாளம் காணும் பணியை துவக்க உள்ளது.
வன்னியர் அல்லாதவர்
இந்த குழு கட்சியின் அனைத்து பிரிவுகளிலும், மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும். வன்னியர் அல்லாதவர்களுக்கு நிர்வாக பொறுப்பில் இந்த குழு வாய்ப்பு வழங்கும்.
இமேஜ் மாறுமா?
இந்த நிர்வாகிகளில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாகவும், வன்னியர் அல்லாத ஜாதிகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். வன்னியர் அல்லாதவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கப்படும். இந்த மாற்றங்களை செய்த பிறகு பாமக மீதான இமேஜ் மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.