8 வழிச்சாலை திட்டம்.. களம் இறங்கினார் அன்புமணி ராமதாஸ்.. மக்களிடம் நேரில் கருத்து கேட்கிறார்
8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்பார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து வருகிற ஜூன் 26, 27 தேதிகளில் கருத்து கேட்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாமக சார்பில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், தலைநகர் சென்னைக்கும் சாலை வசதி உறுதியான சாலைக் கட்டமைப்பு வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஏற்கெனவே சென்னை - சேலத்துக்கு 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அதோடு, சென்னையில் இருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக 3 வது நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவும் போதாதென சேலத்துக்கு 8 வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பசுமை வழிச்சாலையை எதிர்ப்பவர்களை அரசின் அனுகுமுறை குறித்து குறிப்பிடுகையில், "பசுமைவழி சாலையை எதிர்ப்பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிசெய்பவர்கள் கூறுவது கேலிக்கூத்தானது. பா.ம.க. வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ் மேலும் தனது அறிக்கையில், "பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பா.ம.க. நடத்தவுள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.