நவீனா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர நீதிமன்றத்திற்கு செல்வோம்: ராமதாஸ்
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி நவீனா குடும்பத்திற்கு ரூ.1 கோடி பெற்றுத் தரக்கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படு கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி நவீனா ஆகியோர் கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். ஐ.நா. சபை உடன்படிக்கைகளின்படி தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுவாதி, நவீனா ஆகியோர் உருவப்படம் பொறித்த பதாகைகளை ஏந்தியபடி பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி அனைவரும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி ராமதாஸ் பேசியதாவது: காதல் நாடாக திருமணங்களை தடுப்பதற்காக பெண்கள் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 21 வயதுக்குள் பெண்களால் தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் குறைபாடுகளால் சிறுவயதிலேயே காதல் வலையில் விழுந்து, திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றப்படுகின்றனர் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
தமிழகத்தில் காதல் நாடக திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் 32 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சில இளைஞர்கள் ஈவ்-டீசிங் செய்கின்றனர். எனவே போலீஸார் ஈவ்-டீசிங் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தி பள்ளி, கல்லூரி அருகில் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகே சாதாரண உடையில் நின்று கண்காணிக்க வேண்டும்.
சென்னையில் மகளிர் பேருந்து இயக்கப்படுவது போல, தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மாணவிகள், பெண்களுக்கு என்று மகளிர் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழுப்புரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டத்தில் நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன்.
ஒட்டுமொத்த சமுதாயமும் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீதியுடன் கூடிய சமத்துவம் இருக்க வேண்டும். சமூக ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதம், இனம், சாதி வேறுபாடு இன்றி ஒரு தாய் பிள்ளை போல அனைவரும் வாழ வேண்டும் என்பதே பாமகவின் கொள்கைகள்.
விழுப்புரம் மாவட்டத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி நவீனாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. எனவே மாணவி நவீனா குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர நீதிமன்றத்தை அணுகுவோம். பெண் முதல்வராக இருக்கின்றன இந்த தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.