பாமக நிழல் நிதிநிலை அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும்: ஜிகே மணி அறிவிப்பு
சென்னை: பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிடுவதை பாமக வழக்கமாகக் கொண்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோக்குடன் 13 ஆண்டுகளாக நிழல் நிதிநிலை அறிக்கைகளை பா.ம.க. தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வருகிறது.
வளர்ந்த மேற்கத்திய நாடுகளில்தான் அரசியல் கட்சிகள் அரசுக்கு நிழல் நிதிநிலை அறிக்கை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் இம்மாதிரியான நிழல் நிதிநிலை அறிக்கையை தயாரித்து வெளியிடாத நிலையில், பா.ம.க. மட்டுமே மக்கள் நலனுக்கான இந்த கடமையை தவறாமல் செய்து வருகிறது.
நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் மக்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு ஓர் அரங்கத்தை உருவாக்குவதும், அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான். தமிழகத்தில் மக்களாட்சி தழைத்தோங்க, அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்களாக மக்கள் மாறவேண்டும். அரசின் நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கண்காணித்து அதில் பங்கேற்பது தான் உண்மையான மக்களாட்சி ஆகும். அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து மக்கள் அறிவதும் விவாதிப்பதும் கருத்தினை தெரிவிப்பதும் அவசியமாகும்.
மக்களது கருத்துகளை அறிந்து அவற்றை அரசுக்கு தெரிவிக்க வேண்டியது பா.ம.க.வின் கடமை என்று கருதுகிறோம். அந்தப் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதும், இந்த அணுகுமுறையின் மூலம் மாநில அரசு ஒரு சிறந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்க வழிவகுப்பதும், அதன் பலன்கள் மக்களை சென்றடைவதும், அவர்கள் மகிழ்வோடு வாழ்வதும்தான் எங்களது விருப்பம். மக்களை முன்னேற்றுவதற்கான ஓர் அறிவியல்பூர்வமான முயற்சி தான் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையாகும்.
அந்த வகையில் 2016-17 ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினான்காவது நிழல் நிதிநிலை அறிக்கை சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அலுவலகத்தில் நாளை மறுநாள் 17-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு, முக்கிய அம்சங்களை செய்தியாளர்களுக்கு விளக்குவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.