காமராஜர் ஆட்சியை கொடுக்கும் தகுதி பாமகவிற்கு மட்டுமே உண்டு: டாக்டர் ராமதாஸ்
கோவை: தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உள்ளது என கோவை கொங்கு மண்டல மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அக்கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பேசும் போது இரவு பத்தரை மணி. நேரமின்மையாலோ என்னவோ அமைதியாக ஆரம்பித்து சுருக்கமாக முடித்துக்கொண்டார். பேசியது குறைவுதான் என்றாலும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சி என்று கூறி அதிர்ச்சி அட்டாக் கொடுத்தார்.
மலிவான அரசியல்
தமிழகத்தை 50 ஆண்டுகாலம் ஆண்ட இரு திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டனர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகாலம் அதிமுக ஆண்டிருக்கிறது. 22 ஆண்டுகாலம் திமுக ஆட்சி செய்திருக்கிறது. திமுகவினர் காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. நிறத்தைப் பார்த்து அண்டங்காக்கா என்று அநாகரீகமாக பேசினார்கள். மலிவான அரசியல் செய்கிறார்கள் என்றார்.
காமராஜர் ஆட்சி
யார் யாரோ காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உள்ளது.
திரும்பி பார்க்கிறார்கள்
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் எங்களை திரும்பி பார்க்கிறார்கள். யார் இந்த அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாட்டில் பேசக் கூடிய அளவிற்கு, விவாதிக்கக் கூடிய நிலைமையை உருவாக்கியிருக்கின்றோம். இனி வரும் காலங்களிலும் மேலும் அன்புமணி பேசப்படுவார். அவருடைய திட்டங்கள், கொள்கைகள் பற்றி சாதாரண மனிதன் முதல் படித்தவர்கள் வரை பேசக் கூடிய நிலை வரும்.
மது இல்லா தமிழகம்
மதுக்கடைகளை மூடுவோம் என்று இரு திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுவார்களா. நாங்கள் சொல்லுகிறோம். மக்களுடைய வாக்குகளை, பெண்களுடைய வாக்குகளை கவருவதற்காக நாங்கள் சொல்லவில்லை. இதனை 30 ஆண்டு காலமாக சொல்லி வருகிறேன். மது இல்லா தமிழகம் என போராடி வருகிறேன். மக்களே மாற்றத்தை விரும்புங்கள். மாற்றத்தை நோக்கி செல்லுங்கள் என்றும் கூறி தனது உரையை முடித்தார் டாக்டர் ராமதாஸ்