சசிபெருமாள் மகளின் படிப்பு செலவை பாமக ஏற்கும்: அன்புமணி ராமதாஸ்
சேலம்: மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் மகளின் படிப்பு செலவு முழுவதையும் பாமக ஏற்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மது ஒழிப்புக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடத்தி வந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை ஒன்றை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது, போராட்ட களத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கு வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சசிபெருமாள் இல்லத்திற்கு இன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார். சசிபெருமாள் உடல் புதைக்கப் பட்ட இடத்திர்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அன்புமணி, சசிபெருமாள் மனைவி மகிளம், மகன்கள், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, சசிபெருமாள் மகளின் படிப்பு செலவு முழுவதையும் பாமக-வே ஏற்றுக் கொள்ளும் என அவர் வாக்குறுதி அளித்தார்.
மேலும், அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சசிபெருமாள் போராடி வந்தார். இதற்காகவே அவர் உயிரை தியாகம் செய்துள்ளார். தமிழகத்தில் மதுவுக்கு எதிராக அலை வீசுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
4 வயது குழந்தையும் மது குடிக்கிறது. 15 வயது பெண்களும் மதுக்குடிக்கிறார்கள். 16 வயது பெண்கள் கூட்டாக மதுக்குடிகிறார்கள். சேலத்தில் 13 வயது சிறுவன் பள்ளி சீருடையில் மதுக்குடித்து சாலையில் விழுந்து கிடக்கிறான். இப்போது இருக்கும் அரசு மது திணிக்கிற அரசாக இருக்கிறது.
கல்விக்கு, சுகாதாரத்திற்கு, தொழிலாளர்களுக்கு போதிய பணம் ஒதுக்குவதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் போதிய நிதியை ஒதுக்குவோம். மது முழுவதும் ஒழிக்கப்படவேண்டும். கடைசி சொட்டு சாராயம் இருக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
சசிபெருமாள் சென்னையில் 33 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சசிபெருமாளை சந்தித்து அவரது கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து அவரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் இப்போது யார்? யாரோ? மதுவுக்கு எதிராக பேசுகிறார்கள். இந்த பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது, ஓட்டுக்காக பேசக்கூடாது. சமூக பிரச்சினையாக கருதி பூரண மதுவிலக்கை கொண்டு வர போராட வேண்டும். இந்த பிரச்சினை பெண்கள் பிரச்சினை, குழந்தைகள் பிரச்சினை, கலாச்சார பிரச்சினை. இந்த பிரச்சினையை சமூக கண்ணோட்டத்துடன் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இந்த பிரச்சினையை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது.
26 ஆண்டுகளாக பா.ம.க. மதுவுக்கு எதிராக போராடி வருகிறது. தொடர்ந்து போராடும். எங்களது போராட்டம் எதிரொலியாக 600 மதுபான கடைகள் மூடப்பட்டது. மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள 1500 மதுபான கடைகளையும் மூட கேட்டிருக்கிறோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
மக்கள் நல்ல மனமாற்றத்துடன் இருக்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக தான் இருக்கும். மது இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட இப்போது அத்தனை கட்சிகளும் போராடுகிறது. கடைசியாக தி.மு.க.வும் சேர்த்து இருக்கிறது. ஆனால் பா.ம.க. பல வருடங்களாகவே போராடி வருகிறது.
மதுக்கடைகளை மூடவேண்டும் என மக்கள் தமிழகத்தில் மக்கள் இயக்கமாகவே மாறி போராடி வருகிறது. உடனே தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சசிபெருமாளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. இதற்கு நீதி விசாரணை வேண்டும்''என்றார்.