லோக்சபா தேர்தலில், பாஜகவுடன் பாமக கூட்டணி இல்லை.. திட்டவட்டமாக தெரிவித்த ராமதாஸ்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அதேநேரம், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் பாமக இடம் பிடித்திருந்தது. தருமபுரி தொகுதியில் பாஜகவின் அன்புமணியும், கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்று எம்.பிக்களாகினர்
கூட்டணியில் இருந்த தேமுதிக
அந்த கூட்டணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு பெரிய கட்சியான தேமுதிகவுக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிட்டவில்லை. இந்த நிலையில், வரும் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜக கூட்டணியில் பாமக தொடருமா என்ற சந்தேகம் நிலவிவந்தது. ஆனால், நியூஸ் 18 தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மதவாத பாஜக என விமர்சனம்
4 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு 100க்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களை வழங்கியுள்ளார் ராமதாஸ். மேலும், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதவாத அரசாக செயல்படும் பாஜக என்று அவர் விமர்சனம் செய்ததோடு, இதனாலேயே கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ்
திமுக, அதிமுக தவிர்த்து எங்கள் தலைமையை ஏற்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க பாமக தயாராக உள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என கூறியுள்ளது திமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிசை பதிலடி
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸின் கருத்திற்கு பதிலளித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பாஜகவுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழிசை மற்றும் அன்புமணி ராமதாஸ் நடுவே வார்த்தைப் போர் வெடித்தது நினைவிருக்கலாம்.