இப்ப என்ன பண்ணுவீங்க... போக்குவரத்து போலீசாருக்கு பாக்கெட் காமிரா அறிமுகம்
பொதுமக்கள் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து போலீசாருக்கு பாக்கெட் காமிரா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சென்னை: பொதுமக்களும் போக்குவரத்து போலீசாரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தங்கள் தரப்பு நியாயங்களை விளக்க போக்குவரத்து போலீசாருக்கு பாக்கெட் காமிரா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சென்னையில் போக்குவரத்து போலீசார் தாக்கியதாக சமீபத்தில் கால் டாக்சி ஓட்டுனர் ஒருவர் நடுரோட்டில் தீவைத்து கொண்டு பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னரும் வாகன சோதனையின் போது பல இடங்களில் உயிர் பலி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து போலீசாரின் தரப்பு நியாயங்களை கேட்கப்படவில்லை என்றும், அவர்களின் வாய் வழி வார்த்தைகளை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு பாக்கெட் காமிரா வழங்கும் திட்டத்தை அறிமுகம்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. வெளிநாடுகளில் அனைத்து போலீசாருக்கும் இந்த வகை காமிரா வழங்கப்பட்டுள்ளதால், சம்பவ இடத்தில் நடக்கும் விஷயங்கள் அதில் ஆதாரமாக பதிவாகி விடும்.
இந்த வகை காமிராவை முதற்கட்டமாக முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள போலீசாருக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு, ஸ்பென்சர், திநகர் உள்ளிட்ட வாகன சந்திப்புகளில் உள்ள போலீசாருக்கு இந்த பாக்கெட் காமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன.