என்ஜினில் பழுது... 4 மணி நேரம் தாமதமாக ஓடும் பொதிகை .. பயணிகள் பெரும் அவதி
செங்கோட்டை: என்ஜின் பழுது காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ் ரயில் 4 மணி நேரம் ஓடுவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து சிவகாசி வழியாக செங்கோட்டைக்கு இயக்கப்படும் ஒரே ரயில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும்தான். இரண்டு மாவட்டங்களை சார்ந்த பல லட்சம் மக்களின் பயணங்களுக்கு பாலமாக விளங்கும் இந்த ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதிலிருந்தே முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் குறைந்தப் பட்சம் 100 பேராவது இருப்பது இந்த ரயிலில்தான்.
இப்படி பல்வேறு சிறப்புக்கள் நிறைந்த இந்த ரயிலை சமீப காலங்களாக தென்னக ரயில்வே பராமரிக்காமல் புறக்கணித்து வருகிறது. காரணம் இந்த ரயிலில் அடிக்கடி நடக்கும் அவலமே என்ஜின் பழுதுதான்.
ஓன்று புறப்படும் இடமான செங்கோட்டையில் நிற்கும் அல்லது சங்கரன்கோவில், கடையநல்லூர், இப்படி நடுவழியில் பலமுறை புறப்பட்டு சென்று நின்ற அவலங்கள் அரங்கேறிய சம்பவங்கள் ஏராளம்.
நேற்று இரவு 8.30 மணியளவில் சென்னயிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் உளுந்தூர் பேட்டை அருகே வரும் போது என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நின்றது. அதன் பின் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு மிகவும் காலதாமதமாக புறப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு மதுரை வரவேண்டிய இந்த ரயில் 9 மணியளவில்தான் வந்து பின்னர் 10.50 மணியளவில் விருதுநகரை அடைந்ததாக அதில் பயணம் செய்யும் பயணிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
செங்கோட்டையை சென்றடைய மதியம் 12.30 மணியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதால் அடிக்கடி என்ஜின் பழுது காரணமாக காலதாமதமாக ரயில் வருவதால் தனியார் பேருந்துக்களை நோக்கி மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.