மர்ம மரணமடைந்த எடப்பாடி கனகராஜ் போயஸ் கார்டனில் சசிகலாவின் டிரைவர்- பரபர தகவல்கள்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி கொலையில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த கனகராஜ் போயஸ் தோட்டம் பங்களாவில் சசிகலாவுக்குத்தான் கார் ஓட்டினார்
சேலம்: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலையில் தேடப்பட்ட கனகராஜ் மர்மமான முறையில் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் சசிகலாவுக்கு ஓட்டுநராக இருந்தவர் என்கின்றன புதிய தகவல்கள்.
சேலம்-ஆத்தூர் ஹைவே ரோட்டில் தென்னங்குடிபாளையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கனகராஜ் கார் மோதிய நிலையில் பலியானார். முன்னதாக இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்று கூறப்பட்டது.
ஆனால் கனகராஜ் 5 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டன் மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் கார் டிரைவர், உதவியாளர் பணியில் இருந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டவில்லை என்றும் சசிகலாவுக்குத்தான் சில முறை ஓட்டியுள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கனகராஜ் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர். சேலம் முன்னாள் அதிமுக பிரமுகர் சரவணன் என்பவரால் போயஸ் கார்டனுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.
கனகராஜ் மரணம் போயஸ் கார்டனில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனகராஜ் நிலைமை தங்களுக்கும் வந்துவிடுமோ என்று ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள், போயஸ் இல்லத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் என்று பலரும் பீதியில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.