போயஸ் தோட்டம் எனக்கு தாங்க சொந்தம்... தீபா
சென்னை: அத்தையின் போயஸ் தோட்ட இல்லம் எனக்கு தான் சொந்தம் என தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தாய் வேதவல்லியின் பெயரில் வேதா நிலையம் என்ற வீடு போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். எனினும் சசிகலாவின் சொந்தக்காரர்கள் அங்கு வசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் போயஸ் கார்டன் தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்துக்கு வந்தார். மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதவனும் வந்தார்
பின்னர் உள்ளே சென்ற தீபாவை தினகரனின் குண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தீபா தாக்கப்பட்டதை அடுத்து கணவர் மாதவனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். அப்பகுதியில் தீபா, மாதவனின் ஆதரவாளர்களும் குவிந்து வருகின்றனர்.
அரை மணி நேரம்
சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் வெளியே வந்த தீபா கூறுகையில், போயஸ் கார்டன் பாதுகாவலர்கள் தாக்கியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போயஸ் தோட்ட இல்லம் எனக்கு தான் சொந்தம். வீட்டை சட்டபடி மீட்பேன்.
ஆட்சியை கலைக்க வேண்டும்
அத்தை சொத்துக்கு ஆசைப்பட்டு புறம்போக்கு சசிகலாவுடன் தீபக்கும் சேர்ந்து கொன்றுவிட்டான். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை கலைக்க வேண்டும். அதிமுகவையும் போயஸ் தோட்டத்தையும் எப்படியாயினும் மீட்டே தீருவேன்.
போலீஸில் புகார்
என் மீதான தாக்குதல் குறித்து புகார் செய்து தீபக் மற்றும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் கொண்டு செல்வேன். அவரிடம் நேரம் கேட்பேன் என்றார் தீபா.