போயஸ் கார்டன் எனக்கும் தீபாவுக்கும்தான் சொந்தம்.. யாரும் தடுக்க முடியாது.. தீபக் திட்டவட்டம்
போயஸ் கார்டன் தனக்கும் தனது சகோதரி தீபாவிற்கும்தான் சொந்தம் என தீபக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: போயஸ் கார்டனுக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு நுழைய முயன்றார். அதற்கு முன்பாகவே தீபக் அங்கு இருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.
திடீர் வருகை
இந்நிலையில், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு வந்தார்.
பரபரப்பு
கார்டனுக்குள் தீபா நுழைய முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவரது உடன் வந்த தீபா ஆதரவாளர்களும் அனைவரும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொல்ல சதி
இந்நிலையில், தனது சகோதரர் தீபக்தான் சசிகலா கும்பலோடு சேர்ந்து கொண்டு தன்னை இங்கு வரவழைத்து கொல்லப் பார்த்தார் என தீபா பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீபக் மறுப்பு
இதனைத் தொடர்ந்து, தீபாவை போயஸ் கார்டன் தான்தான் வரவழைத்தேன் என தீபக் கூறியுள்ளார். மேலும், வீட்டிற்கு வந்த தீபா ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
போயஸ் தோட்டம் யாருக்கு சொந்தம்
ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம் தனக்கும் தீபாவிற்கும் மட்டுமே சொந்தம் என்றும் தீபக் தெரிவித்தார். இங்கு நாங்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.