கவிஞர் நா.காமராசன் உடல்நலக்குறைவால் காலமானார்!
உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் நா.காமராசன் சென்னையில் காலமானார்.
சென்னை: கவிஞர் நா.காமராசன் நேற்று இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75.
நா.காமராசன் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்கும் பொழுது உடன் பயின்ற மாணவர்களான கா.காளிமுத்து பா. செயப்பிரகாசம் இன்குலாப் ஆகியோருடன் கவிஞர் நா. காமராசன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்புடன் கலந்து கொண்டார்.
முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
எம்.ஜி. ஆரால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு முக்கிய பதவியில் இருந்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி ஆகியோரின் படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
கருப்பு மலர்கள், ஆப்பிள் கனவு, சூரிய காந்தி, தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த அவர், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 75. மறைந்த நா.காமராசனுக்கு 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.