'அம்மா..என்னம்மா ஆச்சு உங்களுக்கு ' புகழ் கவிஞர் சிநேகன் ஓ.பி.எஸ் அணியில்!
கவிஞர் சிநேகன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
சென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான சிநேகன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இன்று இணைந்தார். அவரை மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
அதிமுக, ஒபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என்று இரண்டாக உடைந்ததற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாது, பிரபலங்களும் இணைந்து வருகின்றனர். அண்மையில் அதிமுகவின் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
தற்போது, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒபிஎஸ் அணியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான சிநேகன் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
சிநேகன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 'அம்மா...என்னம்மா ஆச்சு உங்களுக்கு?' என கவிதை ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பாக பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.