சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண் கவிஞர் திலகபாமா கைது!
சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் கவிஞர் திலகபாமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி: கவிதா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைக்கு தீ வைத்த கவிஞர் திலகபாமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி கவிதா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் டாஸ்மாக் கடையில் இருந்து மேஜை, நாற்காலி மற்றும் மது பாட்டீல்களை வெளியே வீசி தீ வைத்து எரித்தனர். கடைக்குள்ளும் அவர்கள் தீவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுக்கடைக்கு தீ வைத்ததற்காக கவிஞர் திலகபாமா உள்ளிட்ட பெண்கள் 14 பேரையும், ஆண்கள் 7 பேரையும் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பெண்களைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் சிவகாசியில் கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.