தமிழக மீனவர் கொடூரமாக சுட்டு படுகொலை... வைரமுத்து கடும் கண்டனம்
தமிழக மீனவரை கொடூரமாக சுட்டு படுகொலை செய்த இலங்கை கடற்படையின் செயலுக்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை :தமிழக மீனவரை கொடூரமாக சுட்டு படுகொலை செய்த இலங்கை கடற்படையின் செயலுக்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம், தங்கட்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழக மீனவர் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் மீன்கள் தான் உண்பதற்கு, மீனவர்கள் அல்லர் என்று அவர் கூறியுள்ளார்.