சின்மயி குற்றச்சாட்டு.. மவுனம் கலைத்த வைரமுத்து!
Recommended Video
சென்னை: தன்மீதான பாடகி சின்மயி விமர்சனங்களுக்கு கவிஞர் வைரமுத்து முதல் முறையாக பதில் அளித்துள்ளார். இருப்பினும் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அதை தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார்.
கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பதிலளித்தார் வைரமுத்து
இந்த நிலையில், முதல் முறையாக, வைரமுத்து இக்குற்றச்சாட்டுகள் குறித்து இன்று பதிலளித்துள்ளார். இருப்பினும் தனது பதிவில் அவர் சின்மயியோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதிலை ட்விட்டரில் அவர் சுறுக்கமாக தெரிவித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
|
வைரமுத்து மறுப்பு
வைரமுத்து கூறியுள்ளதாவது: அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
|
சின்மயி குற்றச்சாட்டு
ஆனால் இந்த பதிவை ரீடிவிட் செய்துள்ள சின்மயி, அதில் பொய்யர் என்ற பொருள்படும் LIAR என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், டிவிட்டரில் நேரடியாக, சின்மயி, வைரமுத்து மீது தாக்குதல் தொடுத்துள்ளார். இரு திரை ஆளுமைகள் நடுவேயான இந்த டிவிட்டர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தள சர்ச்சை
இதனிடையே, வைரமுத்து, திராவிட அரசியலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர், தமிழுக்காக குரல் கொடுப்பவர் என்பதால், சமீபகாலங்களில் தொடர்ச்சியாக அவர் கட்டம் கட்டப்படுகிறார். அதன் ஒரு பகுதிதான் அவர் மீதான புதிய விமர்சனங்கள் என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது.
சுசித்ரா லீக்ஸ்
பாடகி சின்மயிக்கு முன்பாக, மற்றொரு பாடகியான சுசித்ரா, இதுபோல பாலியல் புகார்களை வரிசையாக டிவிட்டரில் அவிழ்த்துவிட்டார். ஆனால் அவர் சில காணொலிகளையும் வெளியிட்டார். இதனால் அதற்கு சுசிலீக்ஸ் என்று நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.