ஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை
ஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது என்று எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அதன்படி கலிங்கத்துப்பரணி இயற்றிய ஜெயங்கொண்டார் குறித்த கட்டுரையை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றினார்.
அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது எனக் கூறினார்.
விழாவில் அவர் மேலும் பேசியதாவது, " உலகுக்கெல்லாம் முத்தும் மிளகும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாலமன் கப்பலில் ஏற்றிச்சென்ற வணிகப் பொருள்களில் தமிழர்களின் மயில் தோகையும் ஒன்று என்று எபிரேய விவிலியம் எழுதுகிறது.
தங்கம்
எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா மதுக் கிண்ணத்தில் குளித்த முத்து கொற்கை முத்து. அன்று முதல் இன்றுவரை உலகத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது தங்கம்தான். அதன் பெருமையை அறிந்து ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாதரூபம், என்று 4 வகையாகத் தங்கத்தைப் பிரித்தவர்கள் தமிழர்கள்.
சோழனின் வெற்றி
முதலாம் குலோத்துங்க சோழன் சக்கரக்கோட்டத்தை வென்றான் என்ற சரித்திரக் குறிப்பு கலிங்கத்துப்பரணியில் காணக் கிடைக்கிறது. அந்தச் சக்கரக்கோட்டம் என்பது இன்றைய மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு மேற்கே 25 மைல் தொலைவில் இருக்கிறது என்று எழுதுகிறார், சரித்திரப் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார்.
கல்வெட்டு
விசாகப்பட்டினத்தை வென்று, அதன் பெயரைக் குலோத்துங்கப்பட்டினம் என்று மாற்றிய கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது. கங்கையும் கடாரமும்கூட சோழப் பேரரசின் வரைபடத்துக்குள் இருந்த வரலாறும் உண்டு.
பறிகொடுக்கப்பட்ட மொழி
எல்லாம் சரிதான். உன் பாட்டனுக்கு ஒரு யானை இருந்தது என்பது இறந்தகாலமாக இருக்கலாம். உனக்கு ஒரு கன்றுக் குட்டியாவது இருக்கிறதா? என்பதே நிகழ்காலம் நம்மை நோக்கி வீசும் வினா. இனத்தை அடகுவைத்துவிட்டு மொழியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டாம் தரக் குடிமகனாய் வாழ்வதற்குத் தாழ்ந்தவன் அல்ல தமிழன்.
ஆதார்
உலகமே ஒரு சிற்றூராய்ச் சுருங்கிக்கொண்டு வரும் வேளையில் தமிழன் என்ற குறுகிய பார்வை தேவையா? என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். 6 அடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டையை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா? அதுதான் இனத்தின் அடையாளம்.
ஏழைகளின் முதுகெழும்பு
தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும். திட்டங்கள் வேண்டும். மறுக்கவில்லை. ஒன்றின் அழிவில்லாமல் இன்னொன்று இல்லை. முட்டை உடையாமல் குஞ்சு இல்லை. ஆனால் முட்டையைக் குஞ்சு உள்ளிருந்து உடைப்பது முட்டைக்குத் தீங்குசெய்ய அல்ல. அப்படித்தான் வேண்டும் 8 வழிச்சாலைகளும். ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது ", இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்துமாணிக்கம், நடிகர் ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.