பாவேந்தர் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதி இனி ”கவிஞர்கள் தினம்” - தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதி கவிஞர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் காலை 10.30 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரையில் கவிஞர்கள் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அவரது உரையில், "தமிழ்மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இந்த அரசு எப்போதுமே உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதன்முறையாக, இசை மற்றும் கவின் கலைகளுக்கென தனி பல்கலைக்கழகம் ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. தகுதி வாய்ந்த அறிஞர்களின் இலக்கிய சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, ஜி.யூ. போப் விருது, அம்மா இலக்கிய விருது போன்ற பல விருதுகள் இந்த அரசால் நிறுவப்பட்டுள்ளன.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாளை ஆண்டு தோறும் தமிழ்க்கவிஞர் தினமாகக் கொண்டாட இந்த அரசு முடிவெடுத்துள்ளது. நமது சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த அரசு பல நினைவிடங்களை அமைத்ததோடு, பல சிலைகளையும் நிறுவியுள்ளது.
அறிவியல், மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனில் உயர் பங்களிப்பாற்றிய தமிழகத்தைச்சேர்ந்த சாதனையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்க இந்த அரசு முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அவரது பிறந்த நாளான அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள் இளைஞர் எழுச்சி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது சாலப்பொருத்தமானது. ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக 1.36 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.